விஜய்க்கு அதிர்ச்சி.. ஈரோட்டில் பொது கூட்டத்திற்கு அனுமதி கேட்ட செங்கோட்டையன்! நோ சொன்ன போலீஸ்
ஈரோடு: தவெக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலுக்காக மீண்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்த வாரம் அவர் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தும் நிலையில், அடுத்த கட்டமாக ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு கொடுத்திருந்தார். இருப்பினும், இடப்பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி, தவெக குறிப்பிட்ட இடத்திற்கு அனுமதி கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வழக்கத்தை விட முன்கூட்டியே இந்தாண்டு தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாகப் பிரச்சாரம் முன்கூட்டியே தொடங்கிப்பட்டுவிட்டது.

விஜய் பிரச்சாரம்
இந்த முறை தேர்தல் களத்தில் புதிதாகக் குதித்துள்ள விஜய்யும் முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். இருப்பினும், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து சில காலம் பிரச்சாரத்தை ஒத்திவைத்திருந்தார். இந்தச் சூழலில் தான் மீண்டும் அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்த வாரம் அவர் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தும் நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் அடுத்து விஜய்யின் கவனம் கொங்குப் பகுதியில் திரும்பியிருக்கிறது. அடுத்தகட்டமாக ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு திட்டமிட்டு வருகிறதாம். இது தொடர்பாக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் செங்கோட்டையன் மனு கொடுத்தார். அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது.
கொங்கு மண்டலம்
பெருந்துறை சாலையில் பவளத்தாம்பாளையம் அருகே இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதிமுகவின் கோட்டையாகவே கொங்கு மண்டலம் இருந்து வரும் நிலையில், விஜய் இப்போது அங்குத் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். கொங்குப் பகுதியே அதிரும் வகையில் இந்தப் பொதுக்கூட்டம் நடக்கும் எனத் தெரிகிறது. மேலும், அப்போது மாற்றுக் கட்சித் தலைவர்களும் கூட தவெகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு இந்த கூட்டம் நடக்கிறது. இதனால் பிரம்மாண்டமாக இதை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதேநேரம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடத்தவும் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதில் செங்கோட்டையன் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் சிக்கலின்றிப் பொதுக்கூட்டம் நடத்தலாம் என தவெகவினர் கருதுகிறார்கள்.
போலீஸ் அனுமதி மறுப்பு
இருப்பினும், ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பவளத்தாம்பாளையம் அருகே விஜய் பரப்புரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் 7 ஏக்கர் நிலத்தில் 75,000 பேர் வருவார்கள் என தவெக குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்த இடத்தில் அத்தனை பேர் கூடுவது பாதுகாப்பானது இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவெக கோரிய இடத்தைக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு செய்த நிலையில், போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளது. வேறு இடத்தைத் தேர்வு செய்து சொல்லும்படி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டையன்
முன்னதாக நேற்றைய தினம் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்தார். அப்போது விஜய்யை இளைஞர்களின் எழுச்சி நாயகன் எனக் குறிப்பிட்ட செங்கோட்டையன், அவர் எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளும் சக்தியாக உருவெடுப்பார் என்றார். செங்கோட்டையன் தவெகவில் அவசரப்பட்டு இணைந்துவிட்டதாக சசிகலா கூறியது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதிலளிக்காமல் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications