வணிகர் தின மாநாடு! தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை! விக்கிரமராஜா அறிவிப்பு!
ஈரோடு: வணிகர் சங்க மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே 5ஆம் தேதியன்று வணிகர் சங்கங்கள் சார்பில் வணிகர் தின மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நாளை மாநாடு நடைபெறுகிறது.
இதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே வணிகர் தின மாநாட்டை ஒட்டி மே 5ஆம் தேதியான நாளை மொத்த சில்லறை வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்களுக்கான காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பாடும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டிருப்பதுடன் பஸ், கார், டூ விலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோட்டில் மாநாடு நடத்துவது போல் இன்னும் சில வணிக அமைப்புகள் வெவ்வேறு ஊர்களில் வணிகர் தின மாநாடு நடத்துகின்றன.
இதனால் நாளைய தினம் பெரும்பாலான மளிகைக்கடைகள், உணவகங்கள் விடுமுறை விடப்படலாம் என்பதால் முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications