மதுரை டூ ஈரோடு.. புத்தம் புதிய லாரியில் சென்ற டிரைவர்.. கூகுள் மேப்பால் மறக்கவே முடியாத சம்பவம்
ஈரோடு: மதுரையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு ஈரோடு நோக்கி வந்தது. ஈரோட்டில் உள்ள வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உள்ள சேமியா நிறுவனத்துக்கு அந்த புத்தம் புதிய கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. கூகுள் மேப்பை நம்பி டிரைவர் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதிக்கு வந்த போது, அவர் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்தது. இதை பார்த்து டிரைவர் மிகவும் கலங்கி போனார்.
கூகுள் மேப்பை நம்பி பயணித்தால் சில நேரங்களில பாதைகள் மாறுவது உண்டு.அந்த பாதையில் சேறு சகதியாக இருக்கலாம்.. அல்லது இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய வழியாக இருக்கலாம்... அதேபோல் சில நேரங்களில் அந்த பாதையில் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார்கள்.. அதனால் மக்கள் எல்லாம் அந்த பாதையை விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் போயிருப்பார்கள்.

ஆனால் நாம் மட்டும் அந்த பாதையில் போய் மாட்டிக்கொண்டு தனியாக நிற்போம். இதேபோல் ரயில் தண்டவாளங்கள் உள்ள பகுதியாக இருக்கும். ரயில்வே சுரங்கப்பாதையாக இருக்கும். அப்படி போய் மாட்டிய வாகனங்கள் வெளியே வர முடியாமல் தவித்து உள்ளன. சில நேரங்களில் வழியை மாற்றிக்கூறி காட்டுகள் சிக்க வைத்த சம்பவங்களும் நடப்பது உண்டு.
அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கூகுள் மேப்பை நம்பி சென்ற குடும்பம் நடுகாட்டில் சேறில் சிக்கி தவித்தது. அதேபோல் சென்னை பள்ளிக்கரணையில் உணவு டெலிவரி செய்யப்போன இளைஞர், சதுப்பு நிலத்தில் சிக்கி தவித்தார். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் ஈரோட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உள்ள சேமியா நிறுவனத்துக்கு, மதுரையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் குருமுருகன் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். குறிப்பிட்ட நிறுவனத்துக்கு செல்ல அவருக்கு வழி தெரியவில்லை. எனவே செல்போனில் வழிகாட்டும் கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே இரவில் பயணித்தபடி வந்துள்ளார்.
ஈரோடு கொல்லம்பாளையம் கடந்து அவர் வந்தபோது, கனரக வாகனங்கள் செல்லும் சாலைக்கு பதிலாக இரும்பு தடுப்பு வைக்கப்பட்ட சாலையை 'கூகுள் மேப்' காட்டியிருக்கிறது.. அதன் வழியாக அவர் சென்றபோது லாரியின் கூண்டு பகுதி அங்குள்ள இரும்பு தடுப்பில் மோதி சிக்கியது. இதனால் இரும்பு தடுப்பு உடைந்து லாரியின் முன்பக்கம் டிரைவர் இருக்கைக்கு மேல் பகுதியில் விழுந்துவிட்டது. அதில் லாரியின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
ஆனால் நல்லவேளையாக டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் தனது புதிய லாரி உருக்குலைந்து போய்விட்டதை நினைத்து கதறி அழுதார். 'கூகுள் மேப்' கைவிட்டதால் புத்தம் புதிய லாரி சிக்கி கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications