நெருங்கும் குஜராத் தேர்தல்.. பாஜக எடுக்கும் "மெகா அஸ்திரம்" - விரைவில் வருகிறது பொது சிவில் சட்டம்
காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், குழு அமைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த முறை குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. இப்போதே ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றன.
அண்ணாமலையின் அடுத்தமூவ்.. பாஜகவில் உதயமான 13 புதிய மாவட்டங்கள்.. தலைவர்கள் நியமனம்..வெளியான பட்டியல்
குஜராத் தேர்தல்
காங்கிரஸ் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய குழுக்களை அமைத்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். 3 கட்சிகளை சேர்ந்தவர்களும் தேர்தல் வாக்குறுதிகளையும், இலவச வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கிவிட்டார்கள்.
பாஜக திட்டம்
அந்த வகையில் போட்டியை சமாளித்து முன்பைவிட கூடுதல் இடங்களில் வெற்றிபெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி குஜராத் மாநிலத்துக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற மெகா அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறது பாஜக.
பொது சிவில் சட்டம்
அதுதான் பொது சிவில் சட்டம். குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அம்மாநில பாஜக அரசு முடிவு செய்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்துகொண்ட மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தலுக்கு முன்
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமைப்பதற்கான குழுவை ஏற்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி வெளியிட்டு இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் திட்டமாக இருக்கிறது.
நீதிபதி தலைமையில் குழு
பொது சிவில் சட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டிலேயே முதல்முறையாக பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட், இமாச்சல்
இதன் தொடர்ச்சியாக விரைவில் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இமாச்சல பிரதேச அரசும் பொதுசிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த 2009 லோக் சபா தேர்தலின் போது பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அத்வானி தேர்தல் வாக்குறுதியை அளித்தார்.
தேர்தல் வாக்குறுதி
2019 லோக் சபா தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடான இந்தியாவில் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களின் மத, கலாச்சார உரிமைகளை காக்கும் வகையில் சிவில் சட்டங்கள் மதங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.
சிறப்பு சட்டங்கள்
திருமணம், சொத்துரிமை போன்றவற்றில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு என அவரவர் மதங்களுக்கு ஏற்ப சிறப்பு சிவில் சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிந்தன. இந்த சிறப்பு சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் பல நாள் திட்டமாக உள்ளது.
விமர்சனங்கள்
ஆனால், பாஜக அரசின் இந்த பொது சிவில் சட்டம் என்பது மத சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான செயல் என்றும், இது அரசியலமைப்புக்கும் சிறுபான்மையினர்களுக்கும் எதிரானது எனவும், நாட்டின் எதிர்காலத்துக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தாக முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.