"நீதித்துறை சாகிறது!" குஜராத்திலேயே ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டம்! தேர்தலுக்கு சில வாரங்கள் முன் பரபர
காந்திநகர்: குஜராத்தில் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு வக்கீல்கள் திடீரென போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் நிகில் எஸ் கரியல். இவரை பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதற்குக் குஜராத் ஐகோர்ட் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், நேர்மையான நீதிபதி தண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம்
குஜராத் ஐகோர்ட் வக்கீல் அசோஷியேசன் சார்பில் நேற்றைய தினம் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நீதிபதி நிகில் எஸ் கரியல் பணியிட மாற்றத்தைக் கண்டித்து வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். இது தொடர்பாகக் குஜராத் ஐகோர்ட் வக்கீல் அசோஷியேசன் தலைவர் பிரித்விராஜ் ஜடேஜா கூறுகையில், "நீதிபதி இடமாற்றம் செய்ததற்கு கொலீஜியம் எந்த காரணத்தையும் சொல்லவில்லை..

நேர்மையாக இருந்தால் தண்டனையா
நேர்மையான, துணிச்சலான நீதிபதி எந்த காரணமும் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நீதித்துறை சுதந்திரம் கொல்லப்பட்டு உள்ளது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு எங்கள் தலைமை நீதிபதியிடம் ஆலோசிக்கக் கூட இல்லை. அவர் இந்த பிரச்சினை குறித்துப் பரிசீலிப்பதாக எங்களுக்கு உறுதியளித்தார்" என்று அவர் தெரிவித்தார்.

போராட்டம்
நீதிபதி அபிஷேக் ரெட்டியை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு எதிராகத் தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ கொலிஜியம் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், கொலீஜியம் முடிவு குறித்த செய்திகள் நேற்று பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதன் காரணமாக ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்..

எதிர்க்கிறோம்
இது குறித்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி ஜடேஜா மேலும் கூறுகையில், "நீதிபதியைக் குஜராத்தில் இருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியம் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம்.

அனைத்து வக்கீல்களும்
ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் ஒரே குரலில் உறுதியளிக்கும் அத்தகைய நேர்மையான நீதிபதியை இடமாற்றம் செய்வது நல்ல முன்னுதாரணம் இல்லை. இது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்க முடிகிறது. இதில் நமது அரசியலமைப்புச் சட்டம் தங்கியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் கொலிஜியத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

என்ன காரணம்.
நீதிபதி கரியல் சமீபத்தில் "குற்றவியல் விவகாரங்களில் அரசையும் போலீசாரையும் மிகக் கடுமையாகக் கேள்வி எழுப்பி இருந்தார் என்றும் இதுவே அவரது இடமாற்றத்திற்கான காரணமாகக் கருதப்படுகிறது என்றும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு வக்கீல் தெரிவித்தார். குஜராத்தில் சில வாரங்களில் தேர்தலும் நடக்க உள்ள நிலையில், இந்த போராட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications