55 வாக்காளர்களுக்காக.. உலகிலேயே உயரமான வாக்குச்சாவடி.. இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் அசத்தல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 55 வாக்காளர்களுக்காக கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மலைப்பிரதேச மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே பலப்பரிட்சை நடக்கிறது.

55 லட்சம் வாக்காளர்கள்
பனி படர்ந்த உயரமான பகுதிகளையும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடங்களையும் கொண்ட இமாசல பிரதேசத்தில் மொத்தம் 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 68 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கு இன்று காலை தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

உயரமான இடத்தில் வாக்குச்சாவடி
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உயரமான மலைப்பகுதிகளை கொண்ட லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள தஸ்ஹிகங் என்ற இடத்தில் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் அடி உயரத்தில்
இந்த வாக்குச்சாவடி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 52 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வரும் தேர்தல் ஆணையம் 52 வாக்காளர்களுக்காக உலகின் மிக உயரமான இடத்தில் வாக்குச்சாவடியை அமைத்துள்ளது.

மிகவும் குறைவான வாக்குச்சாவடி
மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாதிரி வாக்குச்சாவடியாகவும் இந்த வாக்குச்சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. லாஹவுல் மற்றும் ஸ்பிதி (Lahaul-Spiti ) மாவட்டத்தில் மொத்தம் 92 வாக்குச்சாவடிகள் உள்ளன. இமாசல பிரதேசத்தில் மிகவும் குறைவான வாக்குச்சாவடியை கொண்ட மாவட்டம் இதுவேயாகும். இமாசல பிரதேசத்தில் பல இடங்களில் பனிப்பொழிவும் இருந்தாலும் வாக்குகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

52 வாக்காளர்களுக்காக
இது தொடர்பாக இமாசல பிரதேச தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: தஸ்ஹிகங் என்ற இடத்தில் உலகின் உயரமான பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடியில் 52 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்கின்றனர்.

100 சதவீதம் வாக்குப்பதிவு
100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற சாதனையை தக்க வைக்க தயாராகி வருகிறது. மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் மாதிரி வாக்குச்சாவடியாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசத்தில் இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா ? என்பது அடுத்த மாதம் 8 ஆம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications