கழுத்தை நெரித்த கடன்.. ஒசூரில் இரு மகன்களைக் கொன்றுவிட்டு தந்தை செய்த காரியம்
ஒசூர்: ஓசூர் அருகே கடன் பிரச்சனை தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான நபர், தனது இரு மகன்களையும் கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் எல்லாம் கடன் என்றாலே அவமானமாக கருதிய நிலையில், இன்றைய காலத்தில் கடன் இல்லாத மனிதனைப் பார்க்கவே முடியாத என்கிற சூழ்நிலையாகி விட்டது. செல்போன் முதல் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வரை எல்லாமே கடன், இஎம்ஐ இல் தான் இன்று பலருக்கும் ஓடுகிறது. இப்போதெல்லாம் பிரம்மாண்ட திருமணம் நடத்துவதற்கு கூட கடன் வாங்கப்படுகிறது.

சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தாலே இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம், அதிக வட்டி, விரைவில் பணக்காரராவது எப்படி, கோடிகளில் புரளுவது எப்படி என்கிற வீடியோக்கள்தான் அதிகளவில் வருகின்றன. இதனை நம்பி பலர் கடன் வாங்கி முதலீடு செய்து, கடைசியில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு கடும் இழப்பு ஏற்பட்ட நிலையில், கடன் தொல்லையில் சிக்கியதால் தனது இரு மகன்களைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ பூபதிராஜா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், குறிஞ்சி நகர் பகுதியில் மனைவி மற்றும் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். சிவபூபதி ராஜா ஆன்லைன் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சிவபூபதி ராஜா அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவபூபதிக்கும், அவரது மனைவி பார்வதிக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த சிவபூபதி ராஜா வீட்டில் சண்டை போட்டுவிட்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென சிவபூபதி நேற்று இரவு தனது இரண்டு மகன்களான நரேந்திர பூபதி, லத்தீஷ் பூபதி ஆகியோரை இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரது அறையிலேய சிவபூபதி ராஜாவும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்தும் ஓசூர், அட்கோ போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications