கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் ராஜினாமா.. எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி விமர்சனம்
ஓசூர்: கர்நாடகாவில் பாஜகவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக ஆதரிக்கிறார் என குற்றம்சாட்டிய அந்த மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.டி.குமார் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.குமார் கூறியிருப்பதாவது: கர்நாடகா மாநிலத்தை பொருத்தமட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை தொடர்ந்து தமிழர்களுக்கு அரணாக போட்டியிட்டு வருகிறது.

ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தல், தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இதனால் யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பமான மனநிலையில் கர்நாடகா அதிமுகவினர் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி ஏ படிவம், பி படிவத்தில் கையெழுத்திட்டார்.
அது எப்போது என்றால் கர்நாடகா சட்டசபை தேர்தலில்தான். ஆனால் சில நாட்களிலேயே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி கடைசி நேரத்தில் எங்களை வேட்புமனுவை வாபஸ் பெற வைத்தனர். கட்சிக்காக தீவிரமாக உழைத்த நாங்கள் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பினோம்.
நானும் விருப்பமனுவை அளித்திருந்தேன். நேர்காணலும் நடத்தினர். அடுத்த நாள் என்னை தலைமை கழகத்திற்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்படி சென்ற போது என்னை அவர் சந்திக்கவே இல்லை. தமிழகம், புதுவைக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
ஏன் கர்நாடகாவுக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை என கேட்டேன். அதற்கு எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா, "கட்சி நிர்வாகிகள் சொன்னதால் கர்நாடகாவில் வேட்பாளரை நிறுத்தவில்லை" என்றார். அதற்கு நான், கட்சியின் பொதுச் செயலாளர் நீங்கள்தானே. எனவே நீங்களே முடிவெடுத்திருக்கலாமே என்றேன்.
அதற்கும் அவர் தெளிவான பதிலை அளிக்காததால் என்னை பொறுப்பிலிருந்து நீக்குமாறு அவரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய போதும், "கர்நாடகாவில் அதிமுகவால் ஓட்டு வாங்க முடியாது" என கூறினார். சரி யாருக்கு ஆதரவு என்பதையாவது சொல்லுங்கள் என்றேன்.
"குழுவுடன் பேசிவிட்டு சொல்கிறேன்" என கூறியிருந்த நிலையில் எந்த பதிலையும் அவர் கூறவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல் கொடுத்தேன். ஆனால் எடப்பாடியோ எப்போது பார்த்தாலும் குழுவிடம் பேசி முடிவை எடுப்பதாகவே கூறிவருகிறார். அப்படியென்றால் அது எப்படி ஒற்றை தலைமையாகும். கூட்டுத் தலைமைதானே.
நாங்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை கூட ஒரு பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடியால் தீர்மானிக்க முடியவில்லை. 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஜெயலலிதா துணிச்சலாக எதிர்த்தார். ஆனால் இன்றோ சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வது போல் டெல்லி குறித்தோ, மோடி குறித்தோ விமர்சிக்காமல் இருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் நான் பெங்களூரில் போட்டியிடுவதாக இருந்தேன். அப்போது தமிழ் அமைப்பு எங்களுக்கு ஆதரவு கடிதத்தையும் கொடுத்தனர். ஆனால் போட்டியிடவே முடியவில்லை, இதனால் கர்நாடகா மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன். கர்நாடகாவில் பாஜகவை மறைமுகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன். இவ்வாறு எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications