நாய் கடித்து எம்.பி.ஏ பட்டதாரி பலி.. ரேபிஸ் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக விட்டதால் பறிபோன உயிர்!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் ஒருவர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரை நாய் கடித்த நிலையில் அலட்சியமாக எடுத்துக் கொண்ட அவர் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளான அவர் நேற்று உயிரிழந்தார்.
ஓசூர் குப்பட்டி ஊராட்சி தின்னுரை சேர்ந்தவர் எட்வின் பிரியன் (23). எம்.பி.ஏ பட்டதாரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வின் பிரியனை நாய் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். மேலும் நாய் கடிக்கு ரேபீஸ் தடுப்பூசி போடாமல் சிகிச்சை எதுவும் எடுத்து கொள்ளாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

உடலில் மாற்றங்கள்
இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு எச்சில் துப்பியபடியும், சத்தம் போட்டு அலறியபடியும் இருந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை கக்கதாசம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு இருந்ததால் தளி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
ரேபிஸ் பாதிப்பு
அப்போது அங்குள்ள மருத்துவர்கள் அவரை நாய் கடித்துள்ளது, ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு அவருக்கு நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இரவு நேரத்தில் எட்வின் பிரியனை ஒரு அவரது உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் அவர் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார்.
அலட்சியத்தால் பறிபோன உயிர்
ஆனால் சிறிது நேரத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாய்க்கடியை அலட்சியமாக எடுத்துக்க்கொண்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளாததால் எம்.பி.ஏ பட்டதாரி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. படித்த இளைஞரே, நாய்க்கடி பற்றி விழிப்புணர்வு இல்லாமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெருநாய்கள் தொல்லை
தெருநாய்க்கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. தெருநாய்க்கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் நாடாளுமன்றத்திலும் தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக திமுக எம்.பி பிரகாஷ் பேசி இருந்தார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர்.












Click it and Unblock the Notifications