நொறுங்கியது கர்நாடகாவின் எதிர்ப்பு.. ஓசூர் விமான நிலைய இடம் கன்பார்ம்.. தட்டி தூக்கிய தமிழக அரசு
ஓசூர்: ஓசூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியகைப்-பாகலூர் அருகே அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெரியகைக்கும் பாகலூருக்கும் இடையில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. ஓசூரில் இருந்து பெரியகை 25 கி.மீ. தொலைவிலும், பாகலூர் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இந்த குறிப்பிட்ட இடம் கர்நாடகாவில் உள்ள அத்திப்பல்லியில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்திப்பல்லி, ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகும்.

ஓசூரில் விமான நிலையம்
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையம் அமைக்க Taneja Aerospace and Aviation Limited (TAAL) விருப்பம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம்
பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று இடங்கள் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது. தனியாரால் இயக்கப்படும் தனிஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) விமான நிலையம் உள்ள பெலகொண்டப்பள்ளியை விட பெரியகைப்-பாகலூருக்கு OLS ஆய்வு சாதகமாக இருந்ததால், இந்த இடம் இறுதி செய்யப்பட்டது.
பெரியகைப்-பாகலூருக்கும் பெலகொண்டப்பள்ளிக்கும் இடையே சிறிய அளவிலான வேறுபாடுகளை ஆய்வு எடுத்துக்காட்டியது. எனினும் பெரியகைப்-பாகலூரே சிறந்த இடம் என அரசு கருதியதால் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தது. "பெலகொண்டப்பள்ளியாக இருந்திருந்தால், TAAL நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது புதிய இடம் என்பதால், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும்" என ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஓசூர் விமான நிலையம்
தேர்வு செய்யப்பட்ட இந்த இடம், பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டத்தின் தமிழ்நாட்டில் அமையவுள்ள பகுதிக்கு அருகிலேயே உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) தற்போது கட்டப்பட்டு வரும் இந்த சாலை, ஓசூரை பெங்களூரு மற்றும் பிற நகரங்களுக்கு அருகில் கொண்டு வரும்.
இந்த விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசுக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திடம் (BIAL) இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) தேவைப்படும். ஏனெனில் 2033 வரை 150 கி.மீ. சுற்றளவுக்குள் இதுபோன்ற வசதிகளை தடை செய்யும் சலுகை ஒப்பந்தம் விமான நிலைய இயக்குநருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ளது.
ஓசூரில் வரவிருக்கும் இந்த புதிய விமான நிலையம், தென் பெங்களூருவின் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பயன்படும். ஓசூர் நகரம், சுமார் 500 பெரிய தொழிற்சாலைகள் மற்றும் 3,000 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) புகலிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications