லாக்டவுன் நீட்டிப்பு: கர்நாடகா மதுபான கடைகளில் காலையிலேயே சாக்கு பைகளுடன் குவிந்த தமிழக குடிமகன்கள்
ஓசூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க மாநில எல்லைகளில் உள்ள கர்நாடக மதுபான கடைகளில் தமிழக குடிமகன்கள் குவிந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் மே 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த லாக்டவுன் காலத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மதுகடைகளில் அமோக விற்பனை
இதையடுத்து குடிமகன்கள், 2 வார காலத்துக்கு தேவையான மதுபானங்களை வாங்கி குவித்தனர். அதேபோல் கள்ள சந்தையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்யவும் பெட்டி பெட்டிகளாக விற்பனையாகின. இதனால் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் வரலாறு காணாத விற்பனை இருந்தது.
மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
இந்தநிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் மதுபானகடைகள் மட்டும் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகா எல்லைகளில்...
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் உள்ள குடிமகன்கள், சில கிலோ மீட்டர்கள் தூரமே உள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு இன்று படையெடுத்தனர். கர்நாடக மாநிலத்தில் காலை 6 மணிமுதல் காலை 10 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் தமிழக குடிமகன்கள்
கர்நாடகா கடைகளில் ஒருவாரத்திற்கு தேவையான மதுபானங்களை வாங்க மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். இதனால் எல்லைகளில் உள்ள கர்நாடகா மதுபான கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.