காமெடி நிகழ்ச்சிக்கு “அக்கப்போர்”.. இந்துத்துவாவினர் எதிர்ப்பு! ஐதராபாத்தில் 2,000 போலீஸ் குவிப்பு
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரில் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் முனவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி பாஜகவினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2,000 போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.
Recommended Video
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து வருபவர் முனவர் ஃபரூக்கி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவரது நகைச்சுவைகளில் அரசியல் நய்யாண்டி, சமூக அவலம் குறித்து அதிகம் பேசுவார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள், புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் நகைச்சுவையுடன் கலந்து விமர்சிப்பார் முனவர் ஃபரூக்கி.
முனவர் ஃபரூக்கி
இதன் காரணமாக முனவர் ஃபரூக்கியை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முனவர் ஃபரூக்கி கைதும் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற இருந்த முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தன.
தடையும் கைதும்
முனவர் ஃபரூக்கி மீது பல மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன் அவரது நிகழ்ச்சிகளை நடத்த தடையும் இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தின் சூரத், வதோதரா, மும்பை, ராய்பூர், கோவா உள்ளிட்ட பல நிகரங்களில் இவரது நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டனர். பெங்களூருவில் கடந்த ஆண்டு இதுபோல் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு போலீசார் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.
ஐதராபாத் நிகழ்ச்சி
இந்த நிலையில்தான் முனவர் ஃபரூக்கி ஐதராபாத்தில் நேற்று ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தெலுங்கானா அரசும் காவல்துறையும் எதிர்ப்புகளுக்கு இணங்காமல் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கியது.
இந்துத்துவா எதிர்ப்பு
நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஏராளமான இந்துத்துவா அமைப்பினர் திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நோ அரசியல்
மாலை 6:30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக மதியம் 3 மணிக்கே வந்துவிட வேண்டும் என ரசிகர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தினர். பார்வையாளர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் முனவர் ஃபரூக்கி அரசியல் நகைச்சுவை செய்யவில்லை என்றும், திருமணம் மற்றும் நண்பர்கள் பற்றிய நகைச்சுவையே நிகழ்த்தியதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.