ஆந்திராவில் கொடூரம்! பூட்டிய காரில் சிக்கி மூச்சுத்திணறலால் 4 குழந்தைகள் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் துவாராபுடி கிராமத்தில் நின்றிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மூச்சுத்திணறலால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாராபுடி கிராமத்தில் ஒரு பகுதியில் பூட்டப்படாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த காரில் உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகிய 4 குழந்தைகளும் ஏறி விளையாடியதாக தெரிகிறது.
அப்போது அந்த குழந்தைகள் திடீரென காரின் கதவுகளை லாக் செய்தனராம். இதனால் அச்சமடைந்த குழந்தைகள் கதவை திறக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காரின் கண்ணாடிகளும் மூடப்பட்டிருந்ததால் காற்று இல்லாமல் குழந்தைகள் மூச்சுத்திணறி மயங்கியதாக தெரிகிறது.
குழந்தைகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவர்களை 3 மணி நேரமாக அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது குழந்தைகள் காரில் சிக்கியுள்ளதை கண்டுபிடித்த பெற்றோர்கள், அவர்களை காரில் இருந்து மீட்ட போது அவர்கள் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்வுக்காக வந்த போதுதான் இது போன்றதொரு சம்பவம் நடந்தது. குழந்தைகளின் சடலங்களை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கலங்க செய்தது.
இறந்தவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாருமதியும் கரிஷ்மாவும் உடன் பிறந்தவர்கள். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களுக்கு கூறுகையில், இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. திருமண விழாவுக்கு வந்த போது இந்த குழந்தைகள் எல்லாம் காரில் சிக்கியுள்ளனர். மொத்தம் 5 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 4 பேர் மட்டும் காருக்குள் சென்று கதவை லாக் செய்து கொண்டனர். இதனால் காற்று இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். பெற்றோரும் இது போன்ற நிகழ்வுகளின் போது குழந்தைகளை தங்கள் கண்காணிப்பில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த மாதம் கூட தெலுங்கானா மாநிலத்தில் ரங்காரெடி மாவட்டத்தில் பூட்டப்பட்ட காரில் சிக்கிய இரு சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகத்தின் வடு இன்றும் மறையாத நிலையில் ஆந்திராவில் மேலும் 4 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications