காதலை நிராகரித்த கல்லூரி மாணவி.. இளைஞர் செய்த சம்பவத்தால்.. கதிகலங்கிய தெலங்கானா
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் காதலை நிராகரித்ததற்காக கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல் என்பது இரு மனம் சார்ந்த விஷயம். காதல் என்பது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. அவ்வாறு கைகூடினால் அவர்கள் பாக்கிய சாலிகள்தான். காதலை சொல்வதற்கே பயப்பட்ட 80's, 90's கிட்ஸ்கள் இருந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் டிசைன் டிசைனாக தங்களது காதலைத் தெரிவித்து மெர்சலாக்குகின்றனர் 2கே கிட்ஸ்கள்.

ஒருபக்கம் பார்ப்பதற்கு இது வியப்பாக இருந்தாலும், இப்போதுள்ள தலைமுறையிடம் காதல் தோல்வியையோ, அல்லது நிராகரிப்பையோ தாங்கும் மனப் பக்குவம் குறைவாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். காதல் தோல்வியாக இருந்தாலும் சரி, நிராகரிப்பாக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய வலியைத் தரும் என்பது உண்மைதான்.
ஆனாலும் அதில் இருந்து விடுபட்டு அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்வதுதான் அனைவருக்குமே நன்மை பயப்பதாக இருக்கும். அதைத் தவிர்த்து காதலித்த பெண்ணையோ, ஆணையோ துன்புறுத்துவது, அசிங்கப்படுத்துவது, தாக்குவது போன்றவை அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.
இந்நிலையில், ஆன்லைனில் நட்பாகப் பழகிய பெண்ணிடம் காதலை நேரில் தெரிவித்த இளைஞர், அதை நிராகரித்ததற்காக மாணவியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு இணையதளம் மூலமாக இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களது பழக்கம் நட்பாக மாறியுள்ளது.
இந்நிலையில், அந்த மாணவி அரசு பட்டப் படிப்பு கல்லூரிக்குத் தேர்வெழுத வந்துள்ளார். அப்போது, ஆன்லைனில் பழகிய இளைஞரும் அங்கு வந்து மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மாணவி இளைஞரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அந்த இளைஞர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், காதலை நிராகரித்ததால் அந்த மாணவியை இளைஞர் தாக்கியிருக்கலாம். ஏற்கனவே இளைஞரும், மாணவியும் பெங்களூரில் வைத்து சந்தித்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியை தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள இளைஞகரைத் தேடும் பணி தீவிரமாக மேறகொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications