தெலுங்கானாவில் 'ரிசார்ட் அரசியல்' நாயகன் டிகே சிவகுமார் டேரா! காங். எம்எல்ஏக்களை பாதுகாக்க தீவிரம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் இரவோடு இரவாக ஹைதராபாத் விரைந்தார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். தெலுங்கானாவில் நவம்பர் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 71% வாக்குகள் பதிவாகி இருந்தன.

தெலுங்கானா வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே நேற்று முதலே பெரும் பரபரப்பு நிலவுகிறது. தெலுங்கானாவில் வெல்லும் வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தி கட்சி மாற பேரம் பேசி வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அல்லது புதிய எம்.எல்.ஏக்களை பாதுகாக்க டெல்லி மேலிடம் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரை அம்மாநிலத்துக்கு அனுப்புகிறது என தகவல்கள் வெளியாகின. அத்துடன் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் மேலிடப் பார்வையாளர்களையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்தார்.
இதனையடுத்து உடனடியாக தெலுங்கானா மாநிலம் விரைந்தார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டிகே சிவகுமார் நேற்று இரவு கூறியதாவது: தெலுங்கானா மக்கள் இந்த முறை மாற்றத்தைத் தருவது என்பதில் முடிவாக உள்ளனர். எங்களுக்கு வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையில் இருக்கிறோம். தெலுங்கானாவில் காங்கிரஸ் நல்ல அரசாங்கத்தை தரும் என்கிற உறுதி மொழியைத் தருகிறோம்.
தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுடன் பிஆர்எஸ் கட்சி பேரம் பேச தொடங்கி இருக்கிறது. இதனை காங்கிரஸ் வேட்பாளர்கள் எங்களுக்கு தெரிவித்தனர். இதனால் எங்களது வேட்பாளர்களைப் பாதுகாக்க நாங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்களது வேட்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக எங்களது கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் எந்த ஒரு வேட்பாளரும் அல்லது எம்.எல்.ஏவும் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை மீறி வேறு கட்சிக்கு செல்லவோ ஆதரவு தரவோ மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதர மாநிலங்களிலும் இதே வியூகத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுக்கலாம் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆளும் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெற தடுமாறலாம் என்பதும் கருத்து கணிப்பு முடிவுகள்.












Click it and Unblock the Notifications