379 வகையான உணவு.. தடபுடலாக விருந்தளித்து அசத்திய பெண் வீட்டினர்.. ஷாக் ஆகிபோன மருமகன்!
ஹைதராபாத்: ஆந்திராவின் கோதவரி மாவட்டத்தில் மகரசங்கராந்தி பண்டிகைக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவு பதார்த்தங்களை பரிமாறியிருக்கின்றனர். இத்தனை உணவுகளை பார்த்தாலே வயிறு நிரம்பிவிடும் போல இருக்கிறது இதை எப்படி சாப்பிடுவது என திகைத்த மாப்பிள்ளையை விடாமல் பெண் வீட்டினர் அனைத்தையும் சாப்பிட வைத்துள்ளனர். இந்த சுவாரசிய சம்பவம் குறித்தும் மாப்பிள்ளைக்கு இப்படி தடல் புடல் விருந்து அப்பகுதியில் அளிப்பதற்கான பின்னணியும் இங்கே காணலாம்.
புதிதாக திருமணம் முடிந்த மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் தனி வரவேற்பு இருக்கும். வீட்டுக்கு மாப்பிள்ளை வருகிறார் என்றால் அன்றைய தினம் காலையில் இருந்தே தடல் புடலாக வரவேற்க மாமனார் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயராகிக் கொண்டு இருக்கிறார்.
மாப்பிள்ளையின் மனம் கஷ்டப்பட்டு விடகூடாது என்பதற்காக பார்த்து பார்த்து உணவு வகைகளைக் கூட பரிமாறுவார். இது எல்லா குடும்பங்களிலும் நடக்கக்கூடியது தான்.. இதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

மருமகனுக்கு என ஷ்பெஷல்
ஆனால், ஆந்திர மாநிலத்தில் ஒரு குடும்பம் தங்கள் மருமகனுக்கு 379 வகையான உணவு பதார்த்தங்களை தயாரித்து கொடுத்து மாப்பிள்ளையை திக்கு முக்காட வைத்து இருக்கிறார். இதையெல்லாம் பார்த்தாலே வயிறு நிறைஞ்சிடுமே.. இதை எப்படி சாப்பிடுவது என உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் திருதிருவென விழித்து இருக்கிறார் அந்த மாப்பிள்ளை. இந்த சுவாரசிய நிகழ்வு குறித்த விவரம் வருமாறு:-ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு பகுதி விருந்தோம்பலுக்கு பெயர் போனதாக அறியப்படுகிறது.

கவுரவ பிரச்சினையாக
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மகர சங்கராந்தி பண்டிகையின் போது தங்கள் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைகளுக்கு வித விதமாக உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர். இதில் யார் சிறப்பாக வரவேற்பு கொடுப்பது என்பது ஒரு போட்டோ போட்டியே அப்பகுதி மக்கள் இடையே நடக்குமாம். இதனால், மாப்பிள்ளைக்கு வரவேற்பு அளிப்பது என்பதையும் தாண்டி தங்கள் கவுரவ பிரச்சினையாக பார்க்கும் இப்பகுதி மக்கள் தடல் புடல் விருந்து அளித்து மாப்பிள்ளைக்கும் சர்பிரைஸ் கொடுக்கின்றனர்.

மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்
அந்த வகையில், தான், கடந்த ஏப்ரல் மாதம் முரளிதர் என்பவர் எலுரு பகுதியில் உள்ள குசுமா என்ற பெண்ணை மணம் முடித்துள்ளர். விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகபள்ளி டவுன் பகுதியை சேர்ந்த முரளிதருக்கு கோதாவரி மாவட்டத்தில் பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயம் பற்றி பெரிதாக தெரியாதாம். திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக வரும் மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி மாமனார் வீட்டிற்கு மனைவியுடன் முரளிதர் வந்துள்ளார்.

மாப்பிள்ளையை கவர..
மாப்பிள்ளை முரளிதரை எப்படியாயினும் அசத்திவிட வேண்டும் குசுமா வீட்டினர் திட்டம் போட்டுள்ளனர். அதன்படி, அதிகபட்ச எண்ணிக்கையில் உணவு பதார்த்தங்களை வீட்டிலேயே சமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 10 நாட்களாகவே என்னென்னெ உணவை சமைக்கலாம் என பலமாக திட்டம் வகுத்துள்ளனர். விருந்தோம்பலில் கடும் போட்டி நடக்கும் கோதவரியில் கடந்த ஆண்டு ஒரு வீட்டில் 365 வகையான உணவு பதார்த்தங்கள் தயாரித்து கொடுத்துள்ளனர். அதுவே அப்பகுதியில் அதிகபட்ச சாதனையாக இருந்துள்ளது.

379 வகையான உணவு
எனவே இதை முறியடித்து மாப்பிள்ளையை அசத்திவிட வேண்டும் என்ற திட்டத்தில் 379 வகையான உணவு பதார்த்தங்களை செய்து முடித்தனர். சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வீட்டு விருந்துக்கு வந்த மாப்பிள்ளை இத்தனை வகையான உணவுகளை பார்த்து திகைத்து போனார். பெண் வீட்டார் போட்டி போட்டு ஒவ்வொரு உணவையும் ஊட்டி விட்டதில் திக்குமுக்காடிப்போன மாப்பிள்ளை வயிறு நிரம்ப நிரம்ப சாப்பிட்டு பெருமூச்சு விட்டபடிதான் எழுந்து இருக்கிறார்.

அப்படியே ஷாக் ஆகிவிட்டார்
இது குறித்து குசுமா கூறுகையில், "அனைத்து வகையான உணவு வகைகளையும் வழங்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம். கடந்த 10 தினங்களாகவே என்ன உணவு கொடுக்கலாம் என மெனுவை தயாரிக்க தொடங்கினர். இத்தனை உணவு பதார்த்தங்களையும் பார்த்த எனது கணவர் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications