ரோடு இல்லை.. போர்வையில் கர்ப்பிணி.. பொத்தென கீழே விழுந்த குழந்தை.. அலறிய ஆந்திரா
ஹைதராபாத்: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை போர்வையில் வைத்து தூக்கிச் சென்ற போது, பாதி வழியிலேயே பிறந்த குழந்தை கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவமானது, இன்னமும் இந்தியாவில் விளிம்பு நிலை மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் துன்பப்படுவதை படம்பிடித்து காட்டுவதாக உள்ளது.
தற்போது படுகாயமடைந்துள்ள அந்தக் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இன்னும் ஆபத்தான கட்டத்தை குழந்தை தாண்டவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரியாக பொருந்தும் ஷங்கர் பட வசனம்..
இயக்குநர் ஷங்கரின் பல திரைப்படங்களில் ஒரு வசனம் தவறாமல் இடம்பெறும். 'இந்தியாவில் ஏழை இன்னும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறான்; பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிக்கொண்டே இருக்கிறான்' என்பதுதான் அந்த வசனம். நாட்டில் நடைபெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது அது எந்த அளவுக்கு உண்மை என்பதை உணர முடிகிறது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதரப்பு மக்களின் வளர்ச்சியை மட்டும் உறுதிப்படுவதாக இருக்கக்கூடாது. ஒருபுறம் மாட மாளிகையிலும், சொகுசுக் கார்களிலும் மக்கள் சென்று கொண்டிருக்க, மறுபுறம் வீடும், அத்தியாவசியமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மனிதர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகளாகியும் கூட, இன்னும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் சாலை வசதி கூட இல்லை என்ற அவலத்தை எங்கே போய் சொல்வது? சாலை வசதி இல்லாததால் அந்த மக்கள் தினந்தோறும் படும் அவஸ்தைகளும், துன்பங்களும் சொல்லி மாளாது. அப்படியொரு கொடுமையான சம்பவம்தான் ஆந்திராவில் நடந்துள்ளது.

சாலை வசதி இல்லாத அவலம்
ஆந்திர மாநிலம் அல்லூரி சித்தராமா ராஜு மாவட்டத்தில் உள்ளது நித்தமமிதி என்ற பழங்குடியின கிராமம். மலைக்கிராமமான இங்கு ஒரு சாலை கூட கிடையாது. எந்தவொரு அத்தியாவசியத் தேவைக்கும் அங்குள்ள வனப்பகுதியை கடந்து 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள வசமமிதி பகுதிக்குதான் அவர்கள் செல்ல வேண்டும். சாலை வசதி இல்லாததால் நோயாளிகள், கர்ப்பிணிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது. இந்த தாமதத்தாலேயே அந்த கிராமத்தில் ஆண்டுதோறும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ராதா (25) என்பவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரவச வலி ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் அங்கு வராது. குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும்தான் அவரை தூக்கிச் செல்ல வேண்டும். ஆனால், மாலை நேரம் ஆகிவிட்டதால் வனப்பகுதியை கடப்பது ஆபத்தாகிவிடும். எனவே, விடியற்காலை வரையில் ராதா பிரசவ வலியில் துடித்துள்ளார்.

கல்லில் விழுந்த குழந்தை
பின்னர், அதிகாலை 5 மணியளவில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு போர்வையில் ராதாவை படுக்க வைத்து அவரை தூக்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், வனப்பகுதியை கடக்கும் போதே பிரசவ வலி அதிகமாகி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் வலியில் அவர் துடித்ததால் போர்வையில் இருந்து குழந்தை வழுக்கி கீழே இருந்த கல் மீது விழுந்தது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியில் துடிக்கும் தாய் ஒருபுறம், ரத்தம் கொட்டும் குழந்தை ஒருபுறம் என இருவரையும் தூக்கிக்கொண்டு கிராம மக்கள் நடநத்னர். பின்னர் சில கி.மீ. கடந்து அங்கு வந்த லாரியில் ஏறி அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாயின் உடல்நலம் தேறிவிட, குழந்தைக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அது ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications