ரொம்ப மோசம்.. கூட்டாட்சி மாண்பை சிதைக்கிறார்.. மோடி மீது சந்திர சேகர ராவ் சரமாரி குற்றச்சாட்டு
ஹைதராபாத்: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட்டாட்சி மதிப்பை பாதிக்கிறது, மாநிலங்களை பலவீனப்படுத்துகிறது என்று சந்திர சேகரராவ் விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக இன்று காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி "இந்தியா வல்லரசு ஆகும் வரை நான் ஓயப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைப்பாகையை கவனித்தீர்களா..! செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலம்
பிரதமர் உரை
நாடு முழுவதும் மக்கள் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்த சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்கிற தனது வேண்டுகோளை ஏற்று மக்கள் வீடுகளில் கொடி ஏற்றியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
தெலங்கானா
இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தெலங்கானாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனங்களை வைத்தார். "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூட்டாட்சி எனும் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளனர். ஆனால் தற்போது மத்திய அரசு இதனை சிதைத்து வருகிறது" என்று தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செஸ் வரி
தொடர்ந்து பேசிய அவர், "தற்போது உள்ள மத்திய அரசானது கூட்டாட்சி விழுமியங்களை சிதைக்கிறது. மட்டுமல்லாது மாநிலங்களை நிதி ரீதியாக நலிவடையச் செய்யும் வேலைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவதை போன்றதாகும். மத்திய அரசு வசூலிக்கும் வரி மூலம் வருவாயில் 41 சதவீத பங்கை மாநிலங்கள் பெற வேண்டும், ஆனால் மத்திய அரசு மாநிலங்களின் பங்கைக் குறைக்க வரிகளுக்கு பதிலாக செஸ் விதித்து மறைமுகமாக வருமானம் ஈட்டுகிறது."
விமர்சனம்
"இதனால் 2022-2023 ஆண்டில் மாநிலங்களின் வருமான பங்கை 11.4 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோதாது என்று மாநிலங்களின் மேல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் பொருளாதாரம் மீது மாநிலங்களுக்கு உள்ள சுதந்திரத்தை பாதிக்கிறது. கூட்டுறவுக் கூட்டாட்சியின் இலட்சியங்களைப் பற்றிப் பேசும் மத்திய அரசு, உண்மையில் அதிகாரங்களை மையப்படுத்துவதில் ஈடுபடுகிறது" என சந்திர சேகரராவ் விமர்சித்துள்ளார்.
கலந்தாலோசிக்காமல் முடிவு
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசு ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள பிரச்னைகளின் மீது மாநில அரசை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. மட்டுமல்லாது அதை மாநிலங்கள் மீதும் திணிக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் வேளாண் சட்டங்கள். இது மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டதால் போராட்டத்தின் காரணமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை துரோகிகள் என அடையாளப்படுத்தினார்கள். ஆனால் தற்போது சட்டத்தையே வாபஸ் பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றும் கூறினார்.
ஜிஎஸ்டி-வெறுப்பு அரசியல்
"பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை செலுத்தி வசூலித்து வருகிறது. இது சாமானிய மக்களை பாதித்துள்ளது. மட்டுமல்லாது, மக்கள் நலனே அரசுகளின் முதன்மைப் பொறுப்பு. அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாமல், நலத்திட்டங்களை இலவசங்கள் என்று கூறி மத்திய அரசு அவமதிப்பது குற்றம் ஆகும்" என்றும், "மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே இவர்கள் தங்களின் தோல்விகளை மறைக்க வெறுப்பு அரசியலுடன் மக்களைப் பிளவுபடுத்தும் தந்திரங்களில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.