திட்டமிட்டு செய்கிறார்கள்! இஸ்லாமியர்களை புண்படுத்துவதே பாஜக கொள்கை.. நபிகள் சர்ச்சை! விளாசும் ஓவைசி
ஹைதராபாத்: தெலங்கானாவில் எம்எல்ஏ நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓவைசி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கி. நாடு முழுவதும் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர், அரசியல் குறித்தும் பயங்கரமாக நையாண்டி செய்வார்.
அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட இந்தியாவில் அவரது நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன
பழைய சம்பவத்தில் பாடம் கற்ற பாஜக.. நபிகள் நாயகத்தை அவமதித்து கைதான எம்எல்ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
போராட்டம்
இந்தச் சூழலில் தான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். இதற்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் போராட்டம் நடத்திய போதும், நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்தச் சூழலில் தெலங்கானா கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் முனாவர் ஃபரூக்கியின் தாயாரை விமர்சிக்கும் வகையில் பேசி இருந்தார்.
நபிகள் நாயகம்
மேலும், அதில் நபிகள் நாயகம் குறித்தும் சில சர்ச்சை கருத்துகளைக் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், மஜ்லீஸ் கட்சி சார்பில் அவருக்கு எதிராக மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் ஓவைசி, "இது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் பாஜகவின் திட்டமிட்ட முயற்சி. இந்த விவகாரம் நுபுர் சர்மா நிகழ்வின் தொடர்ச்சி தானே தவிர வேறு எதுவும் இல்லை.
கொள்கை
பாஜக முஸ்லிம்களையும் முகமது நபியையும் வெறுக்கிறது. இது பாஜகவின் அதிகாரப்பூர்வ கொள்கைப் போலவே தெரிகிறது. பாஜக எம்எல்ஏ கொச்சைப்படுத்தும் வகையில் கூறிய அந்தக் கருத்துகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹைதராபாத் அமைதியாக இருப்பதை அவர்களால் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடிவதில்லை.
கட்டமைப்பை உடைக்க முயல்கிறது
தேசத்தின் சமூக கட்டமைப்பை உடைக்க பாஜக விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்களை மன ரீதியாக காயப்படுத்தவே பாஜக முயல்கிறது. இதை அவர்கள் கொள்கை போல செய்து வருகின்றனர். பாஜகவின் நூபுர் ஷர்மாவை கைது செய்துள்ளனரா என்ன? இப்போதும் கூட அவர் போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
கடும் நடவடிக்கை
தெலங்கானா பாஜக எம்எல்ஏ கூறியதைப் பிரதமர் ஒப்புக்கொள்கிறாரே என்ன? அவர் ஏன் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார். மாநில அரசும் கூட இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையான நிலையில், ராஜா சிங்கை தெலங்கானா அரசு கைது செய்தது. மேலும், பாஜகவும் ராஜா சிங்கை தற்காலிகமாகக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.