1 ரூபாய் கூட இல்ல... இதுல சிசிடிவி கேமரா வேற... கடுப்பான திருடன்!
இந்த மாதிரி ஒரு நிலைமை எந்த திருடனுக்கும் வரக் கூடாதுன்னு சொல்ற அளவுக்கு தெலங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு தரமான சம்பவம்தான் சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் பகுதியில் பூட்டிய ஹோட்டலில் திருடுவதற்காக திருடன் ஒருவன் சென்றுள்ளார். ஹோட்டலில் உள்ள அனைத்து இடங்களையும் அலசி ஆராய்ந்த திருடனுக்கு கடைசி வரை பணம், பொருள் என எதுவும் கிடைக்கவில்லை. இதனால், கடும் அதிருப்திக்குள்ளான அந்த திருடன் ஹோட்டலுக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்து ஒரு ரூபாய் கூட இல்லாத இந்த ஹோட்டலில் சிசிடிவி கேமரா.... என தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஹோட்டல் முழுக்க தேடித் தேடி சளித்த அந்த திருடன் சரி தண்ணியாவது குடிப்போம் என்று பிரிஜ்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளார். திரும்பி வந்த திருடன் தனது பர்சில் இருந்து 20 ரூபாயை எடுத்து இது தண்ணீருக்காக எனக் கூறி அங்கிருந்த டேபிள் மீது வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மறுநாள் காலையில் ஹோட்டலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சிசிடிவி வீடியோ காட்சிகளை சோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான் இந்த திருடனின் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மகேஸ்வரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications