வயிறா இல்லை குவாரியா? கிட்னியில் 206 சிறுநீரக கற்கள்..! தலைசுற்றிப் போன மருத்துவர்கள்? என்ன ஆச்சு..?
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட 56 வயது நபருக்கு நடந்த ஒரு மணி நேர அறுவை சிகிச்சையில் அவரது சிறுநீரகத்தில் இருந்து 206 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டதால் மருத்துவர்களே ஆச்சர்யமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் வீரமல்லா ராமலக்ஷ்மையா என்ற 56 வயது முதியவர் வசித்து வருகிறார்.
முதுமை காரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது தனது மகன்களுடன் வசித்து வரும் அவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் மிகக் கடுமையாக தாங்க முடியாத வலி இருந்துள்ளது.
உலக சிறுநீரக தினம்: சிறுநீரக செயல் இழப்பின் அறிகுறிகள் பாதுகாப்பு முறைகள் - மருத்துவர்கள் ஆலோசனை
கடும் வயிற்று வலி
இதையடுத்து தினசரி பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமம் அடைந்த வீரமல்லா அருகிலுள்ள மருத்துவர்களைப் பார்ப்பதும் அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்ட உடன் வயிறு வலி குறைவதுமாக இருந்துள்ளார். நாட்கள் ஆக ஆக மாத்திரைகளுக்கு வலி குறைவதோடு மேலும் அதிகரிப்பதால் தாங்க முடியாத அளவுக்கு வலி அதிகரித்துள்ளது.
முதியவருக்கு அறுவைச் சிகிச்சை
இதையடுத்து இதுகுறித்து தனது மகன்களிடம் கூறியதை அடுத்து அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்த மருத்துவர்கள் அதற்கான தேதியையும் குறித்துள்ளனர்.
206 சிறுநீரக கற்கள்
இதன்பின்பு ராமலட்சுமையாவுக்கு கவுன்சிலிங் வழங்கி பின்னர் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் முதியவர் வீரமல்லா ராமலக்ஷ்மையாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது சிறுநீரகத்தில் அனைத்து கற்களும் அகற்றப்பட்டன. அதனை எண்ணிப் பார்த்தபோது மருத்துவர்களே மிரண்டு போயினர். காரணம் முதியவரின் வயிற்றில் சிறியதும் பெரியதுமாக 206 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டுள்ளன.
முதியவர் குணம்
அறுவைச் சிகிச்சையில் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வீரமல்லா ராமலக்ஷ்மையா உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். கோடை காலங்களில் உயர்ந்து வரும் வெப்பநிலையால், பலருக்கும் நீரிழப்பு ஏற்படுகிறது. இது முடிவில் சிறுநீரகங்களில் கற்களாக உருமாறி விடுகிறது. அதனால், அதிக அளவு நீர் அருந்த வேண்டும் என்றும் சாத்தியப்பட்டால் இளநீர் அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.