அராஜகம் பண்ணுவாங்க.. பாஜககிட்ட மட்டும் தெலங்கானாவை கொடுத்துடாதீங்க.. விளாசிய கே.டி. ராமாராவ்
"எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், ஒரு பேச்சுக்காவது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வளர்ச்சியை வலியுறுத்தி பேசும். ஆனால், என்றைக்காவது வளர்ச்சி குறித்து பாஜக பேசுவதை பார்த்திருக்கிறீர்களா?"
ஹைதராபாத்: அராஜகக்காரர்களான பாஜகவினரிடம் தெலங்கானாவை கொடுத்துவிடாதீர்கள் என அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், கே.டி. ராமாராவ் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா சட்டப்பேரவையை தகர்ப்போம் என பாஜக தலைவர்கள் பேசியதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சியாக மாறும் பாஜக
தெலங்கானாவில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி (பிஆர்எஸ்) ஆட்சி நடந்து வருகிறது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதியாக இருந்த அக்கட்சியின் பெயர் அண்மையில் இவ்வாறு மாற்றப்பட்டது. தெலங்கானாவை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை ஓரங்கட்டி, பாஜக அந்த இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது.

அழிவை மட்டும் பேசும் கட்சி
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் உரையாற்றினார். அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது: எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், ஒரு பேச்சுக்காவது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வளர்ச்சியை வலியுறுத்தி பேசும். ஆனால், என்றைக்காவது தெலங்கானா வளர்ச்சி குறித்து பாஜக பேசுவதை பார்த்திருக்கிறீர்களா? வளர்ச்சிக்கு பதிலாக அழிவை பற்றி பேசும் கட்சிதான் பாஜக.

"தெலங்கானாவை கொடுக்காதீர்கள்"
தெலங்கானா பாஜக தலைவர் பண்டி ரெட்டி ஒரு அறைகூவல் விட்டிருக்கிறார். அதாவது, தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநில சட்டப்பேரவையை தகர்ப்போம் என அவர் கூறியிருக்கிறார். அவருக்கு போட்டியாக, காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ப்ரகதி பவனை தகர்ப்போம் என அறிவித்திருக்கிறார். நாங்கள் வளர்ச்சியை பற்றி பேசுகிறோம். பாஜகவும், காங்கிரஸும் அழிவை பற்றி பேசுகின்றன. நாங்கள் அடிக்கல் நாட்டுவோம். அவர்கள் மனிதர்களை புதைக்க சுடுகாடு தோண்டுவார்கள். இந்த அராஜகக்காரர்களிடம் தெலங்கானாவை கொடுத்துவிடாதீர்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

"மக்கள் நிராகரிக்க வேண்டும்"
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவையும், காங்கிரஸையும் தெலங்கானா மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இவர்களால் குண்டு வைப்பது குறித்தும், தகர்ப்பது குறித்தும்தான் சிந்திக்க முடியும். தெலங்கானாவுக்கு என்ன வேண்டும், தெலங்கானா மக்களுக்கு என்ன நன்மை செய்ய வேண்டும் என ஆக்கப்பூர்வமாக இவர்களால் சிந்திக்க முடியாது. இவ்வாறு கே.டி. ராமாராவ் கூறினார்.












Click it and Unblock the Notifications