தெலுங்கானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து! 37 ரயில் சேவை பாதிப்பு.. சென்னை வரும் பயணிகள் தவிப்பு
ஐதராபாத்: கர்நாடகாவில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் தெலுங்கானாவின் படப்பள்ளி அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் 37 பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தெலுங்கானாவின் படப்பள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகாவில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்றது. தெலுங்கானா மாநிலத்தின் ராகவபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இரும்பு லோடுகள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் வரும் 37 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டன. இரண்டு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்ட பகுதியில் தண்டவாளத்தை சீர் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் வடமாநில ரயில்கள் எல்லாம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதற்கிடையே, ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாகவும் இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "தெலுங்கானாவில் மற்றொரு சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 20 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்கள் தடம் புரள்வது புதிய விதி போல தெரிகிறது. ரயில்வே அமைச்சர் எங்கே இருக்கிறார்? இன்ஸ்டாகிராமில் புதிய ரீல்ஸ் போடுவதில் அவர் பிசியாக இருப்பது போல தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து விபத்துக்கள் நேரிடாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications