தாயத்தை கட்டினால் வைரஸ் அண்டாது.. லட்சக்கணக்கில் ஏமாற்றிய கொரோனா பாபா.. அலேக்காக தூக்கிய போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாமியார் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து கொடுப்பதாக கூறி மக்களிடம் லட்சக்கணக்கான பணம் பெற்று ஏமாற்றியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தில் ஹஃபீஸ்பெட்டில் மார்தாண்டா நகரைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் தனது உதவியாளர் முகமது சலீமுடன் இணைந்து மோசடி காரியங்களில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.
இவர் மந்திரம், மாந்திரீகம் என கூறி பொதுமிக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

மாந்திரீகம்
கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த இஸ்மாயில் பாபா கொரோனா நோயிலிருந்து காப்பாற்றுவேன் என கூறி மக்களை நம்ப வைத்துள்ளார். அதுமுதல் அவரை அனைவரும் கொரோனா பாபா என்றே அழைத்தார்கள். இவரிடம் ஏராளமான தாயத்துகள் உள்ளனவாம். இந்த தாயத்துகளை வைத்துக் கொண்டு இவர் மாந்திரீகம் செய்தது தெரியவந்தது.

பணம்
இந்த தாயத்தை கட்டினால் கொரோனா அண்டாது என கூறி மக்களிடம் இருந்து ரூ 30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் என சுமார் 80 பேரிடம் வாங்கியுள்ளாராம். பணத்தையும் வாங்கிக் கொண்டு மருந்தையோ தாயத்தையோ இஸ்மாயில் வழங்காததால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முற்றுகை `
அவரிடம் மக்கள் போய் கேட்ட போது அவர்களை செய்வினை வைப்பதாக கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த மக்கள் சைதராபாத் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து ஹஃபீஸ்பெட்டில் உள்ள இஸ்மாயிலின் வீட்டை போலீஸார் முற்றுகையிட்டார்கள்.

கைதான பாபா
இதையடுத்து அவரையும், அவரது உதவியாளரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அங்கு இருந்த எலுமிச்சபழங்கள், தாயத்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கொரோனா பாதித்தால் நேராக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமே தவிர இதுபோல் போலி சாமியார்களை நம்பி ஏமாறக் கூடாது. அது போல் கொரோனா வந்துவிடும் என அச்சம் உடையவர்கள் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தாயத்து, சாமியார் இதெல்லாம் மூடநம்பிக்கை என்று போலீஸார் அறிவுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications