ஹைதராபாத்தில் நள்ளிரவில் நின்ற சுமதி.. அடுத்தடுத்து அணுகிய 40 ஆண்கள்! அரசு பஸ் ஸ்டாண்டில் பகீர் ஷாக்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் காகித அளவிலான சட்டமாக மட்டும் இருக்கிறதா அல்லது நடைமுறையில் சாத்தியப்படுகிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க காவல்துறை ஒரு அதிரடி முயற்சியைக் கையில் எடுத்தது. இந்தச் சோதனையின் முடிவுகள் இப்போது சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளதோடு, பொதுவெளியில் பெண்கள் சந்திக்கும் அன்றாடச் சவால்களை அப்பட்டமாகத் திரையிட்டுக் காட்டியுள்ளன. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஹைதராபாத் காவல்துறையின் ஷீ டீம் (She Team) பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் சுமதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நகரின் முக்கியமான மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சாதாரண குடிமகன் போல உலவினார்.

ஹைதராபாத் காவல்துறை சபாஷ்
காரணம், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், மற்றும் ஆள் நடமாட்டம் சற்று குறைவாக உள்ள பகுதிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கண்டறிவதற்காகவே இப்படியொரு ரகசிய பிளான் போடப்பட்டது.
இதற்காக எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் வைத்திருக்காமல், தனி ஒரு பெண்ணாக சுமதி சாலையில் நின்றிருந்தார். அப்போதுதான் சில ஆண்களின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியது.
பெண் காவலர் சுமதியைச் சுமார் 40 ஆண்கள் அணுகியுள்ளனர். அவர்கள் அவரிடம் ஆபாசமாகப் பேசுவது, கேலி செய்வது, பின்தொடர்வது எனப் பல வகைகளில் தொல்லை கொடுத்துள்ளனர். சிலர் தங்களது வாகனங்களில் வந்து அவரை ஏறச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஒரு பெண் போலீஸ் என்று தெரியாமலேயே, சுமதியிடம் தவறான நோக்கத்தில் பேசி, அவரது அமைதியைக் குலைக்க முயன்றுள்ளனர்.
பெண் போலீஸ் சுமதி
அதாவது நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை சுமார் 3 மணிநேரம், பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்றிருக்கிறார் சுமதி. சுமார் 180 நிமிடங்களுக்குள் இத்தனை ஆண்கள் ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்தது, அந்தப் பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை உறுதிப்படுத்தியது.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த ஷீ டீம் அதிகாரிகள் அதிரடியாகச் செயல்பட்டு, பெண் காவலர் சுமதியிடம் அத்துமீறிய நபர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரை அணுகிய அந்த 40 நபர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்துள்ளனர். சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், பிடிபட்டவர்களில் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் அடங்குவர்.
ஏதாவது உதவி வேண்டுமா
இவர்கள் அனைவரும் உடனடியாகக் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிடிபட்ட நபர்களுக்குத் தகுந்த எச்சரிக்கையும், சிலருக்குக் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பொதுவெளியில் பெண்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
பைக்கில் சென்றவர்கள் கூட தங்களது வாகனத்தை நிறுத்தி சுமதியிடம் பேசி எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுவிட்டு சென்றார்களாம்.. சுமதி இது போன்று இதற்கு முன்பு ஒரு ரயில் நிலையத்தில் செய்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
அண்டர்கவர் நடவடிக்கை
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஹைதராபாத் காவல்துறை எடுத்து வரும் இத்தகைய "அண்டர்கவர்" நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும், சமூகத்தின் மனநிலை இன்னும் மாறவில்லை என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாக வெளியே வருவதே தவறு என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் வாழும் வரை, சட்டங்களால் மட்டுமே முழுமையான பாதுகாப்பை வழங்கிவிட முடியாது.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை, தவறு செய்யும் எண்ணம் கொண்ட ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications