மனைவி, மகளுடன் எம்என்சி ஊழியர் மரணம்.. மூவரின் நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள்.. அமானுஷ்ய சடங்கா?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் குடும்பத்தினருடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்தில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஹைதராபாத் அருகே அமீன்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுட் (42). இவர் அங்குள்ள எம்என்சி கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனாமிகா. இவர் பள்ளியில் ஆசிரியை. இவர்களுக்கு 7 வயதில் ஸ்னிகித்தா என்ற மகள் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர்களின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்தனர்.
அமானுஷ்ய ஓவியம், மஞ்சள், குங்கும பொட்டுடன் வீடுகள் முன் வீசப்படும் முட்டை.. திருத்தணியில் ஷாக்!
தற்கொலை
அப்போது அவர்கள் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். முதலில் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவே போலீஸார் கருதினர். ஆனால் வீட்டில் நடந்த சோதனையில் அவர்களது வீட்டில் இருந்த சாமி படங்கள் தலைகீழாக கவிழ்க்கப்பட்டு தரையில் கிடந்தன. அவர்களது மூவரது நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள் வரையப்பட்டிருந்தன.
அமானுஷ்ய சடங்கு
எனவே நரபலி, அமானுஷ்ய சடங்குகள் நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருக்கு அந்த அளவுக்கு பக்தி கிடையாது. அங்குள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் என்றால் அனாமிகா ஆலோசனை வழங்குவார்.
என்ன நடந்தது
அவர்களுக்கு மூடநம்பிக்கை எல்லாம் கிடையாது. இருவருமே நன்கு படித்தவர்கள். ஆனால் பண்டிகைகளை இயல்பாக கொண்டாடுவார்கள். மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையையும் தர மாட்டார்கள். அவர்களின் போக்கில் எந்த விதமான மாற்றங்களும் நிகழவில்லை. 18ஆம் தேதி மாலை ஸ்னிகித்தா மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர் வராததால் அவர்கள் வெளியே சென்றிருக்கிறார்கள் என நினைத்தோம்.
வீடு 1. 5 கோடி ரூபாய்
அவர்களது திருமணம் காதல் திருமணம். இந்த வீட்டின் மதிப்பு ரூ 1.5 கோடி ஆகும் என்றனர். இவர்கள் கடந்த 18ஆம் தேதியே இறந்திருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள், அன்று முதல் 20 ஆம் தேதி வரை அவர்களுக்கு அவர்களது பெற்றோர் போனில் அழைத்தும் எடுக்கவில்லை என கூறுகிறார்கள். மேலும் தற்கொலை செய்திருந்தால் அதற்கான கடிதம் ஏதேனும் இருக்கிறதா என போலீஸார் தேடியதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
நரபலி
இதே போல் கடந்த ஆண்டு மதனப்பள்ளியில் ஒரு தம்பதி தங்களது மகள்களை ஏதோ அதீத சக்தி பெறுவதற்காக நரபலி கொடுத்திருந்தனர். இவர்களும் நன்கு படித்த தம்பதிதான். கணவர் புருஷோத்தம் நாயுடு அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றினார். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.