ரஜினிகாந்த் பேச்சை கேட்டா சிரிப்புதான் வருது.. சி.டி அனுப்பி வைக்கட்டுமா? கிண்டல் செய்த ரோஜா!
ஹைதராபாத் : "ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. என்.டி.ராமராவ் பேச்சு அடங்கிய சிடியை ரஜினிகாந்த்திற்கு அனுப்பி வைக்கிறேன். அதை போட்டு என்.டி.ராமராவ் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்" என விமர்சித்துள்ளார் ஆந்திர அமைச்சர் ரோஜா.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்டி ராமராவின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி உள்ளிட்ட ராமாராவ் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த் : அப்போது சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த், "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோதே அந்த துறை பற்றி புரிந்து கொண்டு செயல்பட்டதால் ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்து நியூயார்க் நகரம் போல் வளர்ந்துள்ளது.
அவருடைய ஆட்சி காலத்தில்தான் ஹைதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. விஷன் 2020 என்ற பெயரில் ஒரு திட்டத்தை அமல்படுத்தி ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அவர் வித்திட்டார். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஐதராபாத்தில் துவக்கின" எனப் பேசினார்.
ரோஜா கடும் எதிர்ப்பு : ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும், நடிகையுமான ரோஜா எதிர்வினை ஆற்றியுள்ளார். பாபட்டலாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, "ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. ரஜினிகாந்த் உண்மை தெரிந்து பேசினாரா, இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசினாரா என்று தெரியவில்லை.
2003வது ஆண்டுடன் ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலம் முடிந்து விட்டது. இப்போது இருபது ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் யோசித்துப் பார்க்க வேண்டும்." என்றார்.
சி.டி அனுப்புகிறேன் : மேலும் பேசிய ரோஜா, "நேற்று ரஜினிகாந்த் பேசும்போது, விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்டி.ராமராவ் ஆசிகளைப் பொழிகிறார் என்று பேசினார். என்.டி.ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும்?
தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ், என்னுடைய மருமகன் ஒரு திருடன். அவனை யாரும் நம்பாதீர்கள் என்று கூறினார். ரஜினிகாந்த்திற்கு இது தெரியவில்லை என்றால், என்.டி.ராமராவ் பேச்சு அடங்கிய சி.டி-யை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதை போட்டு என்.டி.ராமராவ் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்" எனச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications