காற்றுவாங்கும் "ஹைதராபாத்" வாக்குச்சாவடிகள்.. வாக்குப்பதிவு மிகவும் மந்தம்! என்ன காரணம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்று லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், அம்மாநில தலைநகர் ஹைதராபாத்தில் மிகக் குறைவான வாக்குகளே பதிவாகி வருகிறது.
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் 4ஆம் கட்ட தேர்தல் இன்று மொத்தம் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நடைபெறுகிறது.

அதில் தெலுங்கானாவில் மொத்தம் இருக்கும் 17 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முதல் இரண்டு மணி நேரத்தில் பதிவான வாக்குகளில் அம்மாநில தலைநகர் ஹைதராபாத்தில் தான் வாக்குப்பதிவு மிகக் குறைவாக உள்ளது.
லோக்சபா தேர்தல்: நம் ஊரில் லோக்சபா தேர்தலின் போது தலைநகர் சென்னையில் தான் மிகக் குறைந்த வாக்குப்பதிவு பதிவாகும். இந்த லோக்சபா தேர்தலில் கூட சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளைச் சேர்த்து வெறும் 55.94% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்கு சதவிகிதம் குறையே இதுவே முக்கிய காரணமாகும்..
கிராமப்புறங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவிகிதம் குறைவது தொடர்கதையாகவே உள்ளது. அதேநேரம் இது சென்னைக்கு மட்டும் நடப்பது இல்லை. பெரும்பாலான மாநில தலைநகர்களிலும் இதே நிலை தான். உதாரணமாகத் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு வெறும் காலை 9 மணி வரை 5.06% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் தொகுதிகள்: பொதுவாக முதல் இரண்டு மணி நேரத்தில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும். வெயில் இருக்காது... காலையிலேயே வாக்களித்துவிட்டால் சொந்த வேலைகளைப் பார்க்கலாம் என்பதால் பொதுமக்கள் காலையில் அதிகமாகவே வாக்களிப்பார்கள். பொதுவாக முதல் இரண்டு மணி நேரத்தில் 8-10 சதவிகிதம் வரை வாக்குப்பதிவு இருக்கும். ஆனால் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை முதலே மந்தமாகவே வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
குறைவு: காலை 9 மணி வரை தெலுங்கானா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 9.51% பதிவாகியுள்ளது. ஆனால், ஹைதராபாத் சிட்டிக்கு உட்பட 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கிறது. ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் முதல் 2 மணி நேரத்தில் வெறும் 5.06% வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதேபோல ஹைதராபாத் நகர் பகுதியில் வரும் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் 5.4% வாக்குகளும், மல்காஜ்கிரி தொகுதியில் 6.2% வாக்குகளும் மட்டுமே பதிவாகி உள்ளன. இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஹைதராபாத்திலும் மிகவும் குறைவான வாக்குகளே பதிவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
முக்கிய காரணம்: ஹைதராபாத்தில் வசிக்கும் மக்களில் கணிசமானோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் பல ஆண்டுகளாகத் தங்கி இருந்தாலும் அவர்கள் சொந்த ஊர் ஆந்திராவைச் சேர்ந்தவையாகவே இருக்கும். திங்கள்கிழமை தேர்தல் நடக்கும் நிலையில், லாங் வீக் எண்ட் என கருதி பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டதாகவும் இதுவும் வாக்கு சதவிகிதம் குறையக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆந்திராவுடன் தெலுங்கானாவை இணைக்கும் விஜயவாடா மற்றும் கர்னூல் தேசிய நெடுஞ்சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நகரில் வசிப்பவர்கள் பொதுவாகவே காலை நேரத்தில் அதிகம் வாக்களிக்க வர மாட்டார்கள்.. 11 - 12 மணிக்கு பிறகே வாக்களிக்க வரத் தொடங்குவார்கள் என்பதால் பிற்பகலில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications