அயோத்தியில் ராமர் கோயில்...பூமி பூஜை...தங்க செங்கல் கொடுக்கும் மொகலாயர் வாரிசு!!
ஐதராபாத்: மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் வாரிசாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட இளவரசர் ஹபீப்புதீன் டுசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல் ஒன்றை பிரதமர் மோடியிடம் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்தான் முன்பு அயோத்தியில் இருக்கும் இடத்தில் தனக்கும் உரிமை இருக்கிறது என்று குரல் எழுப்பி இருந்தார்.
ராம ஜென்மபூமியில் இருக்கும் பாபர் மசூதியை கண்காணிக்க தன்னை ஒரு நபராக நியமிக்க வேண்டும் என்று கடந்தாண்டு இளவரசர் ஹபீப்புதீன் டுசி கோரிக்கை விடுத்து இருந்தார். அந்த இடம் முழுவதையும் தன்னிடம் ஒப்படைத்தால், அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதிப்பேன் என்றும், அப்போது தங்க செங்கல் கொடுப்பேன் என்றும் கூறி இருந்தார். பாபர் மசூதி இடத்துக்கு தான் தான் ஒரே வாரிசு என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். மொகலாயர் குடும்பத்துக்கு சேர்ந்தது சர்ச்சைக்குரிய நிலம் என்று தெரிவித்து இருந்தார்.
சீனாவுக்கு செக்... 371 பொருட்கள் தரக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது... இந்தியா சூப்பர் பிளான்!!
இந்து சகோதரர்களுக்கு வாழ்த்து
இந்த நிலையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு முதல் செங்கல்லாக தான் கொடுக்கும் ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அளிப்பதற்கு என்று கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல்லை டெல்லியில் ஆர்டர் கொடுத்து பெற்று விட்டேன். இதன் மதிப்பு ரூ. 1.80 கோடி. இந்த செங்கல்லை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்தித்துக் கொடுக்க அவரிடம் நேரம் ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளேன். எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் பூமி பூஜையில் கலந்து கொள்வேன். இந்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்துக் கோயில் இடித்து மசூதி
இந்த செங்கல் டிசைனுக்கு டுசிதான் ஆலோசனை வழங்கியுள்ளார். செங்கல்லில் ''ஜெய் ராம்'' என்று பதியப்பட்டுள்ளது. மொகலாயர்கள் இந்துக் கோயிலை இடித்து விட்டுதான், அதன் மீது பாபர் மசூதியை கட்டினர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், டுசி செங்கல் கொடுக்க முன் வந்துள்ளார்.
மசூதி கட்ட இடம்
அயோத்தியில் இருக்கும் இடம் ராமர் கோயில் ட்ரஸ்ட்டுக்கு சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி
இந்த நிலையில் வரும் ஆக்ஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ட்ரஸ்ட் செய்து வருகிறது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இதற்கான விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
எண்ணெய் விளக்குகள்
''அயோத்தியில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெய் விளக்குகளால் ஜொலிக்க வேண்டும். 500 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் வெற்றி கிடைத்துள்ளது'' என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.