தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி அதிகாரியாக உள்ள மகள், தனது அலுவலகத்திற்கு வந்த போது சல்யூட் அடித்து தந்தை வரவேற்பு கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நம்மால் எட்ட முடியாத உயரங்களை நம் பிள்ளைகள் எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற கனவு இல்லாத பெற்றோரே இருக்க முடியாது. சிறுவயதில் தான் ஆசைப்பட்டு பெற முடியாமல் ஏமாந்தது போல நம் பிள்ளைகளுக்கும் நடந்து விடக்கூடாது என பார்த்து பார்த்து தன் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்வார்கள்.

இது நல்ல உடை உடுத்துவதில் தொடங்கி நல்ல கல்வியை பிள்ளைகளுக்கு கொடுப்பது வரை தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கும். தனக்கு நல்லதாக உடுத்த ஒரு துணி இல்லாவிட்டாலும் கூட பிள்ளைகளை ராணி, ராஜா போல துணி எடுத்து கொடுத்து மகிழ்வார்கள்.
நமக்கு கிடைக்காத கல்வி தன் பிள்ளைகளுக்கும் கிடக்காமல் போய்விடக்கூடாது என இரவு பகலாக உழைத்தாவது லட்சியத்தை எட்ட வைக்க பெற்றோர்கள் படும் பாட்டை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில், தங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகி, நினைத்ததை விட பெரிய இடத்திற்கு வந்துவிட்டால் பெற்றோர்கள் எல்லையில்லா மகிழ்ச்சிக்கே சென்று விடுவார்கள்.
தெலுங்கானாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் நடைபெற்றுள்ளது. காவல்துறையில் எஸ்.பியாக பணியாற்றி வருபர், ஐஏஎஸ் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் தனது மகள், தன்னுடைய அலுவலகத்திற்கு வந்ததும் சல்யூட் செய்து வரவேற்ற காட்சி இணையத்தில் வைரல் ஹிட் ஆகிக் கொண்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்..
தெலுங்கானாவில் காவல் கண்காணிப்பாளாராக (SP) பொறுப்பில் இருக்கும் அதிகாரி என். வெங்கடேஸ்வரலு. தெலுங்கானா போலீஸ் அகடமியின் துணை இயக்குனராகவும் இருக்கும் இவரது அலுவலகத்திற்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர். செமினார் ஒன்றிற்காக வந்து இருந்த பயிற்சி ஐஏஎஸ்களில் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்தியும் ஒருவர் ஆவர்.
அகடமியில் தனது மகளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரலு ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் சல்யூட் அடித்தார். உமா ஹார்தியும் சிரித்தபடியே காவல்துறை அதிகாரியின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தந்தை மகளாக இருந்தாலும் பணியிடத்திற்கு வந்ததும் உயரதிகாரி என்ற ரீதியில் வெங்கடேஸ்வரலு சல்யூட் செய்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவுகின்றன.
தனது கனவை நிறைவேற்றிய மகளை நினைத்து பெருமைப்பட்டவாறே சல்யூட் செய்கிறார் என நெட்டிசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். உமா பாரதி கடந்த 2022 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உமாபாராதி தற்போது விகராபாத்தில் அதிகாரியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications