காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பா? விடுவோமா? மோடி தலைமையில் பாஜகவின் ’தெலுங்கானா படையெடுப்பு’!
ஹைதரபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அக்டோபர் 1-ந் தேதி பிரதமர் மோடி தொடங்க உள்ளார். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் பிரசாரம் களைகட்டி வருகிறது.
தெலுங்கானாவின் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி ஏற்கனவே மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களமிறக்கிவிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அண்மைய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெலுங்கானாவில் வெல்வோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார்.

காங்கிரஸ் நம்பிக்கை: தெலுங்கானா தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதம ரூ2,500 உதவித் தொகை, அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவசம் உள்ளிட்டவைகளை மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுத்ததைப் போல இந்த பார்முலா ஒர்க் அவுட் ஆகும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை.
அக்டோபர் 1-ல் பிரசாரம்: இந்நிலையில் தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ளார். தெலுங்கானாவின் மெக்பூப்நகர் புறநகர் பகுதியான பூத்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரும் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்காக முன்னர் நலகொண்டா, நிஜாமாபாத், மக்பூபாபாத் ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் மக்பூப் நகர் புறநகரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நலத் திட்டங்கள் அறிவிப்பு?: பிரதமர் மோடியின் அக்டோபர் 1-ந் தேதி பொதுக் கூட்டத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நலத் திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி, நீண்டகாலமாக பாஜகவின் பி டீம் என்ற முத்திரையை சுமந்து கொண்டிருந்தது. அதற்கேற்ப "இந்தியா" கூட்டணியிலும் இடம் பெறவில்லை. தற்போது பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். அரசை காட்டமாக விமர்சிப்பாரா? அல்லது வழக்கம் போல காங்கிரஸை வறுத்தெடுப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications