தெலுங்கானா: காங். வாக்குகளை கூறுபோடும் பாஜக- தேர்தலுக்குப் பின் பிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரதான போட்டி என்பதே ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கு என்பதையே களநிலவரங்கள் உறுதி செய்கின்றன; இந்த களத்தில் பாஜகவும் இணைந்து வலிய மும்முனைப் போட்டியை உருவாக்குகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?: தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் மிதக்கிறது. ஆனால் தெலுங்கானா தொடர்பான தேர்தல் கருத்து கணிப்புகளோ, "வாய்ப்பே இல்லை ராஜா.. காங்கிரஸ் ஆட்சிதான் அமையும்" என்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகளிடையேயான வெல்லும் தொகுதிகள் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இருக்கவும் வாய்ப்பில்லை என்பதையும் இந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தீர்மானிக்கும் சக்தியாக பாஜக?: தற்போதைய நிலையில் தெலுங்கானா ரேஸில் பிஆர்எஸ், காங்கிரஸ்தான் உள்ளன. இருந்த போதும் விடாப்பிடியாக பாஜகவும் முட்டி மோதுவது என முடிவு கட்டி பிரதமர் மோடி, அமித்ஷா என பெருந்தலைகள் களமிறங்கி பிரசாரம் செய்கின்றன. இன்னொரு பக்கம், தெலுங்கானாவில் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; பாஜகதான் முதல்வர் யார் என்பதையே தீர்மானிக்கப் போகிறது என்கிற 'குதர்க்க' பேச்சுகளையும் வெளிப்படுத்துகின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
காங்கிரஸுக்கான வாக்குகள் சிதறும்?: தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக இயல்பாகவே அதிருப்தி அலை இருக்கிறது. இதனால் காங்கிரஸ் பக்கம் வெற்றிக்கான காற்று வீசுகிறது. ஆனால் அப்படி எல்லாம் காங்கிரஸை எளிதாக வெல்ல வைக்க முடியாது என்பதாலேயே பாஜகவும் களமிறங்கி மும்முனைப் போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை சிதறடிக்க முடியும் என்பது பாஜகவின் வியூகம்.
கூட்டணி ஆட்சிக்கு அஸ்திவாரம்?: அப்படி பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து 10 சட்டசபை தொகுதிகள் வரை வெல்ல முடியும் என்பதும் பாஜகவின் கணக்கு. இந்த கணக்கு பலித்துவிட்டால் பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துவிடலாம்; தெலுங்கானாவிலும் கால் பதித்துவிட முடியும் என நினைக்கிறது பாஜக. இதனால்தான் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களுடன் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் பட்டாளங்களும் பறந்து பறந்து தெலுங்கானாவை வட்டமிட்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. அதுசரி தேர்தலில் வெல்வது ஆட்சி அமைப்பதும்தானே கட்சிகளின் இலக்கு!












Click it and Unblock the Notifications