அக்னி பரீட்சைக்கு தயாரான கேசிஆர்.. 2 தொகுதிகளில் போட்டியிடுவதன் பின்னணியில் பாஜக "மோடி" பாணி?
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல், கமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வடக்கு தெலுங்கானவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் சவால் இருக்கும் என கூறப்படும் நிலையில் கமரெட்டி தொகுதியில் கேசிஆர் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவின் 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். 115 பேரில் 7 வேட்பாளர்கள் மட்டுமே புதுமுகங்கள். எஞ்சிய 108 பேரும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்.

மேலும் முதல்வர் சந்திரசேகர ராவ் தாம் போட்டியிட்டு வென்ற கஜ்வெல் தொகுதியுடன் இம்முறை கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா- தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு சித்தூர் குப்பம் தொகுதியிலும் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி புலிவெந்துல தொகுதியிலும் தொடர்ந்து போட்டியிடுகின்றனர். அதேபோல சந்திரசேகர ராவும் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்தார்.
கஜ்வெல் தொகுதி: 2018 தேர்தல் கஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர ராவ் சுமார் 60% வாக்குகளைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னர் 2014-ல் கஜ்வெல் தொகுதியில் கடும் போட்டியை கேசிஆர் எதிர்கொண்டிருந்தார். 2004, 2009-ம் ஆண்டுகளில் கஜ்வெல் தொகுதியை கான்கிரஸ் கைப்பற்றி இருந்தது.
கமரெட்டி தொகுதியிலும் போட்டி: இம்முறை தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. கமரெட்டி தொகுதியானது வடக்கு தெலுங்கானா மண்டலத்தில் இடம்பெற்றிருக்கிறது. இப்பகுதியில் ஆளும் பிஆர்எஸ் கட்சி காங்கிரஸுடன் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. இத்தொகுதியில் பிஆர்எஸ் கட்சியின் கம்பா கோவர்தன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸின் முகமது அலி சபீரை விட வெறும் 4,557 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கம்பா கோவர்தன் வெற்றி பெற்றார்.
கமரெட்டி தேர்வு ஏன்?: அத்துடன் கமரெட்டி தொகுதி கேசிஆர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கமரெட்டி தொகுதியானது நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில் கேசிஆர் மகள் கவிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருந்தார். தற்போது கமரெட்டி தொகுதியில் களமிறங்குவதன் மூலமாக கவிதாவின் வெற்றிக்கு இப்போதே பாதை போட்டு வைப்பதும் கேசிஆரின் பிளான் என்கின்றனர் அக்கட்சி சீனியர் நிர்வாகிகள்
கள நிலவரம் என்ன?: கமரெட்டி தொகுதியில் கேசிஆர் போட்டியிடுவது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த முகமது அலி சபீர், சந்திரசேகர ராவை வீழ்த்தி சரித்திரம் படைப்போம். இம்முறை காங்கிரஸுக்கு ஆதரவு அலை வீசுகிறது. இதில் சந்திரசேகர ராவ் தோல்வியைத் தழுவுவார் என கூறியிருந்தார். கமரெட்டி தொகுதியில் 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 15,439 வாக்குகளையும் சிறிய கட்சியான சமாஜ்வாதி பார்வார்டு பிளாக் 10,537 வாக்குகளையும் பெற்றிருந்தது.
மோடி பாணியாம்.. : கமரெட்டி தொகுதியை சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுத்தது குறித்து கருத்து தெரிவித்த பிஆர்எஸ் தலைவர்கள், பிரதமர் மோடி குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் போட்டியிட்டார் அல்லவா? வாரணாசியில் பிரதமர் மோடியிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுபோலதான் முதல்வர் சந்திரசேகர ராவ் கமரெட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இது பிஆர்எஸ் கட்சிக்கு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்கும் என்றனர்.












Click it and Unblock the Notifications