பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்க செல்லாதது ஏன்?.. மாநில அரசு விளக்கம்!
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செல்லாதது ஏன் என்பதற்கான விளக்கத்தை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நேற்று மாலை திறந்து வைத்தார். நெற்றியில் நாமம் அணிந்து கொண்டு அவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில அமைச்சர் தலாசனி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தெலுங்கானா முதல்வர் கேசிஆர்
ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செல்லவில்லை. அவருக்கு பதிலாகத்தான் அமைச்சரை அனுப்பி விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கானா பாஜகவும் கடும் கண்டனத்தை தெரிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

வரி குறைப்பு
மேலும் பெட்ரோல் டீசல் விலை விவகாரத்திலும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்ட நிலையில், வரியை ஏற்றிய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முதல்வர் சந்திரசேகர ராவ்
அது போல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் , பாஜக மத்தியில் இருந்து அகற்றப்பட்டு வங்கக் கடலில் வீசப்பட வேண்டும். நமது அரசியலமைப்பை மாற்றி எழுத வேண்டும் என விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முதல்வருக்கு காய்ச்சல்
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கும் வராமல் ராமானுஜர் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் "முதல்வர் சந்திரசேகர ராவுக்கு காய்ச்சல் இருந்ததால் அவரால் பிரதமரை வரவேற்கவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் முடியவில்லை" என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications