தெலுங்கானாவில் கடும் போட்டி! கேசிஆருக்கு தண்ணி காட்டும் காங்.. பரிதாப நிலையில் பாஜக..கருத்து கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என ஏபிபி சி வோட்டர் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் கேசிஆர் கட்சி 49 முதல் 61 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, 43 முதல் 55 இடங்களை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, வெறும் 5 முதல் 11 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள், 4 முதல் 10 இடங்களில் வெற்றி எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications