"பெண் ஆளுநரான எனக்கு அவமரியாதை.. உரிமையை மறுக்கிறார்கள்" - கேசிஆர் மீது தமிழிசை பரபர குற்றச்சாட்டு!
ஹைதராபாத் : குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டேன், ஆளுநர் உரையாற்றும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இப்போதும், நான் எங்கு சென்றாலும், நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என தெலுங்கானா மாநில அரசைச் சாடியுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை.
தெலுங்கானா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று 4வது ஆண்டு தொடங்குவதையொட்டி தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஆளும் டிஆர்எஸ் அரசின் முதல்வர் சந்திரசேகர் ராவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.
நெறஞ்ச மனசு கொண்ட விஜயகாந்த்.. நீண்ட ஆயுளுடன் வாழ தமிழிசை சவுந்தரராஜன், ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து
தெலுங்கானா ஆளுநர்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தொடர் சர்ச்சைகளில் சிக்கியதால், புதுச்சேரி மாநிலத்திற்கும் பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவில் ஆளுநராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆளுநர் தமிழிசை
இதையொட்டி, தெலுங்கானா மாநில ராஜ் பவனில், 4வது ஆண்டு பணி தொடங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஒரு பெண் ஆளுநராக தான் அவமதிக்கப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பெண் ஆளுநர் பாரபட்சமாக நடத்தப்பட்டதை, இந்த மாநிலத்தின் சரித்திரம் எழுதும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை.
உரிமை மறுக்கப்பட்டேன்
குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றம் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது. தெலுங்கானா சட்டப்பேரவையில் கவர்னர் உரை ஆற்றுவதும் மறுக்கப்பட்டது. இப்போதும், நான் எங்கு சென்றாலும், நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஆளுநர் அலுவலகத்திற்கான மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும். ஆனால், அது இங்கு இல்லை எனக் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.
கேசிஆர் வரவில்லையா
மேலும் பேசிய அவர், "சமீபத்தில் தென் மண்டலக் கூட்டம் நடந்தது, அதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கலந்து கொண்டேன், அந்தக் கூட்டத்தில் 75 சதவீத பிரச்சனைகள் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவை. அனைத்து முதல்வர்களும் அப்போது ஏன் முதல்வர் வரவில்லை. அதில் கேசிஆர் கலந்து கொள்ளவில்லையா? பிரச்சனையை தீர்க்க மத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை, உங்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
மதிப்பு வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், "யாரும் வராமல் இருப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், நான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ளாதபோது அவர்களின் அலுவலகமாவது எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். முறையான நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆளுநர் அலுவககம் மதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிய்த்தார்.
புறக்கணிக்கும் முதல்வர் கேசிஆர்
தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசை, குறிப்பாக பிரதமர் மோடியை முதல்வர் கேசிஆர் கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார். பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு வரும் போதெல்லாம், அவரை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து வருகிறார். மேலும், அம்மாநில ஆளுநர் தமிழிசையையும் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் உரை இல்லை
கடந்த மார்ச் மாதம் தெலுங்கானா அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை ஆற்றுவதற்கு அரசு அழைப்பு விடுக்கவில்லை. இதனை எதிர்க்கட்சியான பாஜக கண்டித்தது. ஆண்டின் தொடக்கத்தில் முதல்முறையாக மாநிலச் சட்டசபை கூடும்போது தான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என்று விதி உள்ளது. கடந்த அக். மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் தொடர்ச்சி, அதாவது இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதால் ஆளுநரின் உரை இல்லாமல் நேரடியாகச் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது என டிஆர்எஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழிசை வேதனை
அப்போதே இதற்கு அதிருப்தி தெரிவித்த ஆளுநர் தமிழிசை, "ஆளுநரின் உரையைத் தவிர்க்கச் சட்ட காரணங்களை மாநில அரசு மேற்கோள் காட்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சட்டசபை கூடும் போதும் ஆளுநர் உரையைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக முந்தைய அமர்வையே தொடர்வதாக அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை தவிர்த்து இருப்பதன் மூலம், அரசின் முந்தைய ஆண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை உறுப்பினர்கள் இழக்க நேரிடுகிறது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.