தெலுங்கானாவில் திடீர் பரபரப்பு- ஆளும் பிஆர்எஸ் எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது- பாஜகவுக்கு ஜாக்பாட்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ. பந்த்ல கிருஷ்ண மோகன் ரெட்டி கத்வால் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட டிகே அருணா, தேர்தலில் வெற்றி பெற்றவராகவும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா சட்டசபைக்கு 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இடங்களைப் பெற்று 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. தெலுங்கானா முதல்வராக கே.சந்திரசேகர ராவ் மீண்டும் பதவியேற்றார்.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக் காலம் அடுத்த சில மாதங்களில் முடிவடைகிறது. இம்மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடக் கூடிய 115 வேட்பாளர்களையும் பிஆர்எஸ் கட்சி முதல் கட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு கத்வால் தொகுதியில் பிஆர்எஸ் எம்.எல்.ஏ. பந்த்ல கிருஷ்ண மோகன் ரெட்டி வெற்றிக்கு எதிராக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேட்பாளர் டிகே அருணா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

கத்வால் தொகுதியில் போட்டியிட்ட பந்த்ல கிருஷ்ண மோகன் ரெட்டியின் வெற்றி செல்லாது என தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேட்புமனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக ரூ3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் டிகே அருணா, வெற்றி பெற்ற வேட்பாளராகவும் உயர்நீதிமன்றம் அறிவித்தது. வழக்கு செலவுக்காக அருணாவுக்கு ரூ50,000 தர வேண்டும் எனவும் பந்த்ல கிருஷ்ண மோகன் ரெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட டிகே அருணா, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.

தெலுங்கானாவில் கடந்த மாதமும் இதே போல கொத்தகுடம் தொகுதி பிஆர்எஸ் எம்.எல்.ஏ. வானமா வெங்கடேஷ்வர ராவ் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications