"சார் கறி குழம்பு வச்சி தர மாட்றா".. 100 க்கு போன் போட்ட கணவன்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட்!
ஹைதராபாத்: கறி குழம்பை மனைவி சமைத்து தர மறுத்ததால் அவரது கணவர் போலீஸாருக்கு போன் போட்டு புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானாவின் கனகல் மண்டலத்தில் உள்ள சேரலா கௌராரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டு கறியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆட்டுக் கறியை மனைவியிடம் கொடுத்து சமைத்து தருமாறு அதிகாரம் செய்தது தெரியவந்தது.

கணவர் மீது அதிருப்தி
ஏற்கெனவே கணவர் குடிப்பதால் அவர் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார் அவரது மனைவி, இந்த நிலையில் நவீன் மீண்டும் போதையில் வந்ததால் அவரது மனைவிக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் கறியை சமைக்க முடியாது என மறுத்துள்ளார். குடிக்க வேண்டாம் என சொன்னால் கேட்காமல் தினந்தோறும் போதையில் வந்தால் என்ன அர்த்தம் என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

மனைவி மீது புகார்
மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் கறியை சமைத்து தர மாட்டேன் என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், "எனக்கா கறி குழம்பு சமைக்க மாட்டேங்கிற, இரு உன்ன வச்சிருக்கிறேன்" என கூறி அவர் மீது போலீஸில் புகார் கொடுக்க நினைத்தார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சாத மனைவி "நீ எதையாவது செய்து கோ" என கூறிவிட்டார்.

100 -க்கு போன் போட்ட கணவர்
இதையடுத்து தனது செல்போனை எடுத்த நவீன், அதில் தட்டு தடுமாறி 100 என்ற எண்ணுக்கு போன் செய்தார். அப்போது "சார் எனது மனைவி கறி குழம்பு செய்து தர மறுக்கிறார், இப்போது எனது வீட்டில் தான் இருக்கிறார், உடனே வந்தால் பிடித்துவிடலாம்" என "துப்பு" கொடுத்துள்ளார்.

போலீஸார் கோபம்
யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்த போலீஸார் முதலில் இந்த அழைப்பை துண்டித்துவிட்டனர். ஆனாலும் போதையில் இருந்த நவீன் விடாமல் 6 முறை 100-க்கு போன் செய்துள்ளார். பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக 100 என்ற எண் இயங்கி வரும் நிலையில் இது போல் ஒரு நபர் பேசியது போலீஸாரின் பொறுமையை இழக்க செய்தது.

கணவர் கைது
இதையடுத்து அவரது போன் எண் மூலம் வீட்டு முகவரியை கண்டுபிடித்த போலீஸார் நேராக நவீனின் வீட்டுக்கு சென்றனர். அப்போதுதான் நவீன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வீட்டிலேயே விட்டு சென்ற போலீஸார் மறுநாள் காலை வந்து நவீனை அள்ளி சென்றனர். இதனால் பரபரப்பு எழுந்தது. நைட் நடந்ததெல்லாம் நவீனுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications