ஆந்திர முதல்வரின் தங்கைனு கூட பார்க்கலையே.. ஷர்மிளாவை காரோடு தூக்கிய போலீஸ்.. தெலங்கானா CM அதிரடி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் வீட்டை முற்றுகையிட சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளாவை காரோடு போலீசார் தூக்கி இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை பெயர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இவர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்தார்.
ஆந்திர முதல்வரின் சகோதரி
தந்தை ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை துவங்கி தற்போது முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு சகோதரியின் பெயர் ஒய் எஸ் ஷர்மிளா. 2014ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ஒய்எஸ் ஷர்மிளா திட்டமிட்டார். இதில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
தெலங்கானாவில் புதிய கட்சி
இந்நிலையில் தான் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை துவங்கி தெலங்கானாவில் செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி சமீபத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை உதறி தள்ளிவிட்டு மகள் ஒய்எஸ் ஷர்மிளாவின் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதலமைச்சராக உள்ளார். இவரை எதிர்த்து தான் தற்போது ஒய்எஸ் ஷர்மிளா தெலங்கானாவில் அரசியல் செய்து வருகிறார்.
தெலங்கானாவில் நடைப்பயணம்
இந்நிலையில் தான் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியை எதிர்த்து தற்போது ஒய்எஸ் ஷர்மிளா தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாரங்கால் பகுதியில் நடந்த நடைப்பயணத்தில் அவரது கட்சி தலைவர்கள், ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒய்எஸ் ஷர்மிளா மற்றும் கட்சியினரின் கார்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் அவர் கைது செய்யப்பட்டார்.
முதல்வரின் வீடு முற்றுகை
இந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு இன்று ஹைதரபாத்தில் உள்ள முதலமைச்சர் சந்திரசேகரராவின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி நோக்கி காரில் ஒய்எஸ் ஷர்மிளா சென்றார். நேற்றைய மோதலில் சேதப்படுத்தப்பட்ட காரை ஓட்டிக்கொண்டு அவர் சென்றார். இதுபற்றி அறிந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். திரும்பி செல்லும்படி கூறினர். ஆனால் ஒய்எஸ் ஷர்மிளா கேட்கவில்லை.
காரோடு தூக்கிய போலீஸ்
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் ஒய்எஸ் ஷர்மிளா காரை விட்டு இறங்க மறுத்தார். இதையடுத்து கிரேனை கொண்டு வந்த போலீசார் அவரது காரை ‛டோ'செய்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். ஒய்எஸ் ஷர்மிளா இறங்க மறுத்த நிலையில் காரோடு அவரை போலீசார் கிரேன் மூலம் ‛டோ' செய்து தூக்கி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கட்சியினர், நிர்வாகிகள் அவரது காருக்குள் பின்னால் ஓடினார்கள்.
தாய்க்கும் வீட்டு சிறை
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே மகளை காரோடு போலீசார் தூக்கிய சம்பவம் பற்றி அவரது தாய் விஜயலட்சுமி அறிந்தார். ஹைதராபாத்தில் தங்கிய அவர் மகளை பார்க்க போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார். இந்த வேளையில் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் போலீசார் தடுத்து வீட்டு காவலில் வைத்தனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இருப்பதாக ஒய்எஸ் ஷர்மிளா மற்றும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சம்பவங்கள் இன்று தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.