தெலுங்கானாவில் விஜயசாந்திக்கே இந்த கதியா.. கடைசி லிஸ்டிலும் பாஜக கல்தா.. காங்கிரசுக்கு பல்டி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் இன்று பாஜக வெளியிட்டது. இந்த இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் நடிகை விஜயசாந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து பாஜகவில் இருந்து நடிகை விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையக் கூடு என்கின்றன தெலுங்கானா தகவல்கள்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஜன சேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது பாஜக. ஏற்கனவே 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சி இன்று இறுதி வேட்பாளர்களை அறிவித்தது. இந்த இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் நடிகை விஜயசாந்தி பெயர் இடம் பெறவில்லை.

புறக்கணிக்கப்பட்ட விஜயசாந்தி: தெலுங்கானா தேர்தலில் பேச்சாளர்கள் பட்டியலிலும் கூட நடிகை விஜயசாந்தி பாஜக சேர்க்காமல் இருந்தது. அந்த பட்டியலில் பிரதமர் மோடி உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றிருந்தனர். இத்தனைக்கும் நடிகை விஜயசாந்தி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ஆனாலும் தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலில் விஜயசாந்தி பெயர் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் மீது திடீர் பாசம்: ஏற்கனவே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் விஜயசாந்தி திடீரென, தெலுங்கானாவை காங்கிரஸ்தான் காப்பாற்ற வேண்டும் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பையும் கிளப்பி இருந்தார். தற்போதைய நிலையில் விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தாவுவதைத் தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
எத்தனை கட்சி தாவுவது?: 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர் விஜயசாந்தி. தெலுங்கு சினிமா உலகின் லேடி அமிதாப்பச்சன் - லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர். தமிழ்நாட்டில் அதிமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திய தீவிரமான ஜெயலலிதா பற்றாளர். பாஜகவின் மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியையும் வகித்தார் விஜயசாந்தி. 2005-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய விஜயசாந்தி தனி கட்சி தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை டிஆர்எஸ் கட்சியுடன் (தற்போதைய பிஆர்எஸ்) இணைத்தார். 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். 2014-ல் அந்த கட்சியில் இருந்தும் விலகி காங்கிரஸில் இணைந்தார். 2014 சட்டசபை தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் விஜயசாந்தி. 2020ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜக பக்கம் தாவினார். தற்போது பாஜக கை கழுவிவிட்ட நிலையில் காங்கிரஸ் தான் விஜயசாந்திக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications