கள்ளக்காதல் + 2 கோடி காப்பீடு.. கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. மனைவியின் மாஸ்டர் பிளான்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் மஞ்சீரியாளா மாவட்டத்தில் ஹாஜிபூர் மண்டலத்தை சேர்ந்த பாரதி என்ற பெண், திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அத்துடன் அவரது கணவர் பெயரில் ரூ.2 கோடி அளவிற்கு டேர்ம் இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு இன்சூரன்ஸ்களை எடுத்துள்ளார். இறுதியாக கணவனுக்கு பதில் காதலனுடன் வாழ விரும்பிய பெண், கணவன் பெயரில் காப்பீடு பணத்திற்காக செய்த வேலை, கடைசியில் சிறையில் கம்பி எண்ண வைத்துள்ளது
காப்பீடு பணம் பெற இன்றைக்கு பல்வேறு வகையில் மோசடிகளை சிலர் அரகேற்றுகிறார்கள். இன்னும் சிலர் காப்பீடு பணத்திற்காக கணவனை காலி செய்யவும் தயங்குவது இல்லை.. அப்படித்தான் தெலுங்கானாவில் ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கூலிப்படையை வைத்து மனைவி தீர்த்துக்கட்டியிருக்கிறார்

தெலுங்கானா மாநிலம் மஞ்சீரியாளா மாவட்டத்தில் ஹாஜிபூர் மண்டலத்தை சேர்ந்த 45 வயதாகும் சாயினி குமார் என்பவர் கடந்த 22-ந்தேதி இருசக்கர வாகனத்தில் மஞ்சீரியாளாவுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.
முதலில் இது சாலை விபத்து என போலீசாருக்கு நம்பும்படியே இருந்துள்ளது. ஆனால் விசாரணையில் சில தகவல்கள் விபத்து போல் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், குமாரின் மனைவி பாரதிக்கு, குடிபேட்டையை சேர்ந்த லக்கிசெட்டி சுரேந்துடன் கள்ளத்தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கணவர் உயிருடன் இருந்தால் தங்களது உறவுக்கு தடையாக இருப்பார் என்று பாரதிக்கு தோன்றி உள்ளது. இதனால் சாயினி குமாரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். இது ஒருபுறம் எனில், சாயினி குமாரின் பெயரில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பல காப்பீட்டு நிறுவனங்களில் பாரதி பிரீமியம் கட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சாயினி குமார் விபத்தில் இறந்தால் சுமார் ரூ.2 கோடி வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என பாரதி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, குமாருக்கு கடன் கொடுத்திருந்த ராம் மல்லேஷ் என்பவரிடம், "கணவரை கொலை செய்தால் ரூ.10 லட்சம் தருகிறேன்" என்று பாரதி பேரம் பேசியுள்ளார். அதன்படி, பாரதி மற்றும் சுரேந்தர் இணைந்து ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கி உள்ளாராம். பின்னர், மஞ்சீரியாளா எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ஸ்ரீராம் உள்ளிட்டோரையும் சேர்த்து, திட்டமிட்டபடி கடந்த 22-ந்தேதி சாயினி குமாரை முல்கல் கிராமம் அருகே ஒதுக்குப்புற பகுதிக்கு அழைத்துச் சென்று அதிகளவில் மது அருந்த வைத்துள்ளனர்.
அதன் பிறகு, இரும்பு கத்தியால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, அதை சாலை விபத்து போல காட்டும் வகையில், அவரது இருசக்கர வாகனத்துடன் சாலையோரத்தில் உடலை வீசி விட்டு தப்பிச்சென்றது உறுதியானது. இதையடுத்து, பாரதி, சுரேந்தர், ஸ்ரீராம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், இன்சூரன்ஸ் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான ராம் மல்லேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications