தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி: திருமாவளவன் அதிரடி
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியானது அண்டை மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் விசிக கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக விஜயவாடாவில் ஆந்திரா மாநில விசிக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார்.

முன்னதாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் தயாரானது. இது தொடர்பாக கர்நாடகா சென்ற திருமாவளவன், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்னதாக தெலுங்கானா மாநிலம் சென்று ஹைதராபாத்தில் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார் திருமாவளவன்.
இதனைத் தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடும் என இன்று அறிவித்துள்ளார் தொல்.திருமாவளவன். தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியில் விசிக இணைந்து போட்டியிடுவதில் சிக்கல் இல்லை.
ஆனால் தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதிக்கு எதிர் கட்சிகளாக இருப்பவை காங்கிரஸும் பாஜகவும்தான். முதல்வர் கேசிஆர் பாரத் ராஷ்டிரிய சமிதியுடன் விசிக கூட்டணியில் இடம்பெற்றால் காங்கிரஸ் அதிருப்தி அடையும். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பு.
ஏற்கனவே தெலுங்கானாவில் செல்வாக்கு பெற்றது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி. ஓவைசி கட்சியானது தென்னிந்திய மாநிலங்களின் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறது. வட இந்திய மாநிலங்களையும் கூட விட்டுவைக்கவில்லை. அதுவும் பீகாரில் கணிசமான வெற்றியை ஓவைசி கட்சி பெற்றது அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதே போல மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி, வடகிழக்கு மாநிலங்களில் வங்காளிகள் கணிசமாக இருப்பதால் அங்கு அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் அதனைத் தாண்டி கோவாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்டது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை பிற மாநில தேர்தல்களில் கிளைகள் அமைத்து போட்டியிட்டுள்ளன. ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை.
தற்போது விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன். தென்னிந்திய மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான ஒரு கட்சியாக விடுதலை சிறுத்தைகளை விரிவாக்கம் செய்கிறார்; அத்துடன் தென் மாநில சட்டசபை தேர்தல்களிலும் களமிறங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications