தெலுங்கானாவில் கேசிஆர் - காங் இடையே கடும் போட்டி.. பாஜக நிலைமை படுமோசம்.. ABP-Cvoter கருத்து கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் எந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ABP-Cvoter கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், இந்த முறை கேசிஆருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை தெலுங்கானாவில் கேசிஆருக்கு கடும் சவால் காத்திருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில், ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
சந்திரசேகர் ராவின் பி.ஆர். எஸ் கட்சி 43 முதல் 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 48 முதல் 60 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அக்கட்சிக்கு வெறும் 5 முதல் 11 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவிகிதமும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 37 சதவிகிதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9.4 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது. பாஜகவுக்கு 16 சதவிகிதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications