"குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை" தெலங்கானா அமைச்சர் ராமாராவ் அதிரடி!
ஹைதராபாத்: குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று தெலங்கானா அமைச்சர் கேடி ராமாராவ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தெலங்கானாவில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆபரேஷன் தாமரை என்ற முழக்கத்தை முன்னிலைப்படுத்தினார். அதாவது தெலங்கான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்க தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
குறிப்பாக தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பாஜகவின் செயல்பாடுகள் அதிகரித்தன. அதுமட்டுமல்லாமல் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அண்மையில் தேசிய கட்சியை தொடங்கினார்.

ஆடியோ வெளியாகி பரபரப்பு
இதனிடையே எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்திற்கு பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

குதிரைபேரம்
ஆளும் சந்திரசேகராவ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலா ராஜு, பீராம் ஹர்ஷ்வர்தன் ஆகியோரை விலைக்கு வாங்க மூன்று பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது.

தெலங்கானாவில் பரபரப்பு
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குபவர்கள் பற்றி டிஆர்எஸ் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி போலீசாரை தொடர்பு கொண்டு புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேடி ராமாராவ் பேட்டி
இதுகுறித்து தெலங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கேடி ராமாராவ் கூறுகையில், அமைச்சர் என்ற முறையில் இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. மேலும், கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அதேபோல் பாஜகவினர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றவர்கள்.

குஜராத்திகளுக்கு செருப்பு சுமக்கும் பாஜக
அமித் ஷா செருப்பை சுமந்த தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தற்போது லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்று, அதே கையால் சத்தியம் செய்துள்ளார். குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்கு உள்ள பாஜகவினருக்கு இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. அதேபோல் பண்டி சஞ்சய்-ன் கைகள் சுத்தமாக இல்லாததால், கோயிலை தூய்மைப்படுத்துமாறு கோயில் நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications