ஜெகன்மோகன் ரெட்டியின் வலதுகரம்.. ஒஎஸ்ஆர் எம்பி அதிரடி கைது! என்ன நடக்குது ஆந்திராவில்?
அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை அம்மாநில போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வலதுகரமான, நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று காலை விசாரணை குழுவின் முன் மிதுன் ரெட்டி ஆஜராகியிருந்தார். அவரிடம் 7 மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் மிதுன் ரெட்டி A4 ஆக, அதவது 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். மதுபானக் கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
மதுபான வழக்கு என்பது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்றும் அதில் தற்போது மிதுன் சிக்கியிருக்கிறார் எனவும் அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மிதுன் ரெட்டி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, எஸ்ஐடி ஏற்கனவே அவருக்கு எதிராக ஒரு லுக் அவுட் சுற்றறிக்கையை பிறப்பித்திருந்தது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அவரது முன்ஜாமீனை மறுத்து, சரணடைய அவகாசம் அளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து தற்போது மிதுன் கைதாகியுள்ளார்.
அதிகாரிகள் இப்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராகி வருகின்றனர். அவரது நீதிமன்றக் காவல் குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications