சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்... மத்திய அரசு 'பகீர்' தகவல்
இந்தியா முழுக்க நடக்கும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர் என்று நாடளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடுமுழுவதும் நடக்கும் சாலைவிபத்துகளில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துப்பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
"கடந்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆட்டோமொபைல் துறையில் ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விபத்துகளில் சிக்கி குறைந்தது 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.

30% லைசென்சுகள் போலியானவை
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ்களில் 30 சதவீதம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

147 பாலங்கள் மோசம்
இதேபோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பாலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி நிலவரப்படி சுமார் 1.62 லட்சம் பாலங்களை ஆய்வு செய்ததில், 147 பாலங்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாலங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

கொத்துக்கொத்தாக மரணங்கள்
சாலைவிபத்து இந்தியர்களை போர்கள் இல்லாமல், ஆயுதங்களால் நடக்கும் சண்டைகள் இல்லாமல் கொத்துகொத்தாகக் கொல்லும் ஆபத்து என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு, சாலைவிபத்துக்கள் நடக்கினறன்.

சமூக ஆர்வலர்கள் கவலை
இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கண்காணிப்பு நிகழ்வுகள் நடந்தாலும் விபத்துக்கள் கூடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அதிகபட்ச வேகத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், அதி நவீன கார்கள், பெரிய அளவிலான கனரக வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அனுமதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து முறைகளில் உரிய, பாதுகாப்பான முறைகள் கொண்டுவரப்படும் வரை விபத்துக்களை தடுக்க முடியாது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications