காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் 120 வயதில் தடுப்பூசி போட்ட பாட்டி ஒட்டுமொத்த கிராமத்துக்கே ஊக்க சக்தியாக இருந்துள்ளார்.
வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் பாட்டி தோலி தேவியை கவுரவப்படுத்தினார்கள்.

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் கதியாஸ் என்ற குக்கிராமத்தில் வசித்து வருபவர் தோலி தேவி. இவருக்கு 120 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கும் தோலி தேவி மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
முதலில் தயக்கம் காட்டிய கிராம மக்கள் 120 வயது பாட்டி தடுப்பூசி போட்டவுடன் அலை, அலையாக தடுப்பூசி போட்டனர். ''தடுப்பூசி போட்டதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்'' என்று உற்சாகமாக கூறினார் தோலி தேவி பாட்டி.
ஒட்டுமொத்த கிராமத்துக்கே நம்பிக்கை ஒளி பாய்ச்சிய தோலி தேவியின் செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பாட்டியின் செயலால் ஈர்க்கப்பட்ட வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் நேராக தோலி தேவி பாட்டியின் வீட்டுக்கு சென்றனர்.
கிராம மக்கள் முன்னிலையில் 120 வயது பாட்டி தோலி தேவியை கவுரவித்தனர். இளைய தலைமுறையினரே உடல் உபாதைகளால் அவதிப்படும் இந்த காலத்தில் 120 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்தி மக்கள் அனைவருக்கும் ஊக்கமிக்க சக்தியாக தோலி தேவி பாட்டி இருந்துள்ளார் என்று ராணுவ வீரர்கள் அவரை பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications