பசி தாங்காமல் உணவை சாப்பிட்ட 13 வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியை தாக்கிய தம்பதி
பெங்களூர்: பெங்களூரில் வீட்டு வேலை செய்யும் 13 வயது சிறுமியை தம்பதி தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த சிறுமி அஸ்ஸாமில் வீட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் மூலம் கடந்த ஜூன் மாதம் பெங்களூருக்கு வந்தார். அவர் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வேலை பார்த்த வீட்டில் உள்ள தம்பதி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த தம்பதி சிறுமியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அந்த தம்பதி சிறுமியை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து அவர் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடம்பிலும் காயங்கள் உள்ளன. சமையல் அறையில் உள்ள உணவை எடுத்து சாப்பிடுவதற்காகத் தான் அந்த தம்பதி சிறுமியை இரக்கமின்றி துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்தனர். பெற்றோரை இழந்த சிறுமி பெங்களூர் வரும் முன்பு வரை பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார்.