உயிரை பறித்த வில்லை மிட்டாய்.. 2 வயது குழந்தை துடிதுடித்து பலியான சோகம்.. கதறிய பெற்றோர்
லக்னோ: ஆசையாக வில்லை மிட்டாயை (டோபி) எடுத்து வாயில் போட்டு சுவைத்த 2 வயது ஆண் குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது. வில்லை மிட்டாய் குழந்தையின் தொண்டையில் சிக்கியதால் அந்த குழந்தை மூச்சுவிட முடியாமல் தவித்து இறந்துபோன துயர சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோஹாவர் பகுதியை சேர்ந்தவர் ஷம்ஷாத் அகமது. திருமணம் ஆனவர். இவர் சமீபத்தி்ல பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சக் கோவர்த்தன் என்ற கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார். தனது மனைவி, 2 வயது ஆண் குழந்தை சைஃப் உடன் வசித்து வந்தார். ஷம்ஷாத் பருப்பு வியாபாரம் செய்து வரகிறார். தினமும் கிராமம் கிராமமாக சென்று அவர் பருப்பு வியாபாரம் செய்து அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தான் நேற்று வீட்டு முற்றத்தில் ஷம்ஷாத்தின் மகன் சைஃப் விளையாடி கொண்டிருந்தான். குழந்தையின் அருகே யாரும் இல்லை. திடீரென்று குழந்தை தொடர்ந்து இருமியது. இதையடுத்து ஷம்ஷாத் மற்றும் அவரது மனைவி வந்து குழந்தையை பார்த்தனர். அப்போது குழந்தை மூச்சு விடுவதில் சிரமப்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஷம்ஷாத் தனது மகனை தூக்கி கொண்டு நஹ்தவ்ரில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த டாக்டர் ஆஷிஷ், குழந்தை சைஃப்பின் உடல்நிலையை பரிசோதித்தார். அப்போது குழந்தை இறந்து இருந்தது. இதுபற்றி டாக்டர் சைஃப்பின் தந்தை ஷம்ஷாத்திடம் கூறினார். அதை கேட்டு அவர் கதறி அழுதார்.
முதற்கட்ட விசாரணையில் சாக்லெட் வில்லையை சாப்பிட்டுள்ளார். அந்த வில்லை மூச்சுக்குழாயில் சிக்கி உள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி இறந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி டாக்டர் ஆஷிஷ் கூறுகையில், ‛‛குழந்தைகளின் மூச்சுக்குழாயில் சாக்லெட் வில்லைகள், நிலக்கடலை உள்ளிட்டவை எளிதாக சிக்கலாம். இதனால் சிறு குழந்தைகளுக்கு அதனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்'' என்று அறிவுரை வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications