நிர்பயா நினைவு தினத்தில் வேலூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை
டெல்லி: நாடுமுழுவதும் இன்று நிர்பயா இரண்டாம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிக்கப்படும் இந்த நேரத்தில் வேலூர் குடியாத்தம் அருகே 6ஆம் வகுப்பு பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பாக இன்று பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்து இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாகவே டெல்லியும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களும் இருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன.
டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16ஆம் நாள் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தினால் நாடுமுழுவதும் பெண்கள் கொதிப்படைந்தனர். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனையொட்டி பல்வேறு விழிப்புணர்வு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எனினும், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை அதற்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவரை உபேர் டாக்ஸி டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவமே சாட்சியாகும்.
பலாத்கார சம்பவங்கள்
கடந்த 2012 அம் ஆண்டு 24,923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டில் பலாத்கார சம்பவம் 33,707 ஆக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பற்ற நகரம்
தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது. 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். 2013ல் 1, 441 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
எத்தனை பலாத்காரங்கள்
டெல்லியை அடுத்து மும்பையில் 391 பலாத்கார சம்பவங்களும், ஜெய்பூரில் 192 பலாத்கார சம்பவங்களும், புனேயில் 171 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் அதிகம்
2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகமான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு கடந்த ஆண்டு 4,335 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ராஜஸ்தானில் 3285 பெண்களும், மகாராஷ்டிராவில் 3063, உத்தர பிரதேசத்தில் 3050 பலாத்கார சம்வங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் தினசரி 3 பேர்
தமிழகத்தில் கடந்த ஆண்டு 923 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 3 பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நெருங்கிய உறவினர்கள்
18 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்களே அதிக அளவு பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது 15 ஆயிரத்து 556 பேர் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பெரும்பாலும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களால் தான் பாலியல் பலாத்கார தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என, அரசின் பெண்கள் மற்றும் குந்தைகள் நலத்துறையின் ஆய்வு முடிவுகளே தெரிவிக்கின்றன.
பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வன்கொடுமை சம்பவங்கள் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பின்மையை உணர்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
பாலியல் அச்சுறுத்தல்
டெல்லியில், வெளியே செல்லும் மூன்றில் இரண்டு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் இருப்பதாக தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
உதவிக்கு யார்
பொது இடங்களில் பெண்களுக்கு ஆபத்து நேரும்போது உதவி செய்ய யாரும் முன்வருவதில்லை என்ற கருத்தையும் டெல்லி மக்கள் முன்வைக்கின்றனர்.
வேலை அவசியம்
உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் பாலியல் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வேலைக்கு செல்ல வேண்டிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருப்பதாக டெல்லி பெண்கள் கூறுகின்றனர்.
தொலைபேசி போதுமா?
பெண்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அழைத்து பாதுகாப்பிற்கு ஆட்கள் வரும் முன் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது. எனவே பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அதே நாளில் மற்றொரு சம்பவம்
நிர்பயா சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நாளில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி குப்பம் பகுதியில் ஆறாம் வகுப்பு மாணவி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனிதா கொலை வழக்கு
20.12.2012-ல் தூத்துக்குடி பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். டெல்லி சம்பவத்தைப்போல இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் யாரும் கொதிக்கவில்லை என்பதுதான் கொடுமையான விசயம்.
குற்றவாளிக்கு ஆயுள்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பையா என்பவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு அண்மையில் தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தனியார் காப்பக சிறுமிகள்
ஜூன், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொள்ளாச்சி தனியார் காப்பகத்தில் சிறுமிகள் இருவர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த வழக்கில் வீராசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் வரும் 24ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சிறுசேரி உமா மகேஸ்வரி
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சிறுசேரியில் டிசிஎஸ் நிறுவன ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
பொறியியல் மாணவி கொலை
15-12-14- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
76 சம்பவங்கள்
தமிழகத்தில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 76 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் சமூகம், ஆண்களுக்கு என்ன கற்றுத்தருகிறோம் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.